தற்போதைய விமானப்படைத் தளபதி நவம்பர் 02 இல் ஓய்வு
இலங்கை விமானப்படையின் 18ஆவது தளபதியாக எயார் வைஸ் மார்ஷல் சுதர்ஷன பத்திரணவை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ நியமித்துள்ளார்.
36 வருட சேவையைக் கொண்டுள்ள தற்போதுள்ள விமானப்படைத் தளபதி, எயார் மார்ஷல் சுமங்கள டயஸ், எதிர்வரும் நவம்பர் 02ஆம் திகதியுடன் ஓய்வு பெறுகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
அவர் நேற்றையதினம் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ, பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ, பாதுகாப்புச் செயலாளர் ஓய்வு பெற்ற மேஜர் ஜெனரல் கமல் குணரத்ன ஆகியோரை இறுதியாக சந்தித்திருந்தார்.
2019 மே மாதம் 29 ஆம் திகதி விமானப் படை தளபதியாக நியமிக்கப்பட்ட சுமங்கள டயஸ் இலங்கையின் 17ஆவது விமானப்படை தளபதியாவார்.
முப்பது வருட பயங்கரவாதத்தை ஒழிப்பதற்கு பெரும் பங்காற்றிய அவர் தனது சேவைக் காலத்தில் வடமராட்சி நடவடிக்கை பதக்கம், பூர்ண பூமி சேவா பதக்கம், தேசபுத்ர விருது, ரணசூர விருது (மூன்று முறை), வடக்கு கிழக்கு நடவடிக்கைகள் பதக்கம், உத்தம சேவா பதக்கம், விசிஷ்ட சேவா விபூஷணய உள்ளிட்ட பல பதக்கங்களை வென்றுள்ளார்.
எதிர்வரும் நவம்பர் 02 ஆம் திகதி முதல் 18 ஆவது விமானப்படைத் தளபதியாக எயார் வைஸ் மார்ஷல் சுதர்ஷன பத்திரண தனது கடமைகளை பொறுப்பேற்கவுள்ளதாக, விமானப்படை ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.
1985 ஆம் ஆண்டு ஜூலை 02 ஆம் திகதி விமானப்படையில் சேர்ந்த இவர், தியத்தலாவ விமானப்படைத் தளத்தில் நடத்தப்பட்ட 14ஆவது கெடேட் உத்தியோகத்தர் பாடநெறியில் சிறந்த கெடேட் அதிகாரிக்குரைய விருதைப் பெற்றுள்ளார்.
பாகிஸ்தான் விமானப்படையின் உயர் விமானப் பாடநெறிக்கு தேர்ந்தெடுக்கப்பட்ட மூன்று விமானிகளில் ஒருவரான இவருக்கு, பாகிஸ்தான் விமானப்படையினால் வழங்கப்படும் சிறந்த தோழமை விமானப்படை கெடேட் விருது வழங்கப்பட்டுள்ளது.
கண்டி தர்மராஜா கல்லூரியின் பழைய மாணவரான எயார் வைஸ் மார்ஷல் சுதர்ஷன பத்திரண, இலங்கையில் இடம்பெற்ற போரின் போது கிபீர் மற்றும் F7 போர் விமானங்களுக்கு மேலதிகமாக 10 விமானங்களைச் செலுத்தி பயங்கரவாத இலக்குகளை தாக்கியுள்ளார்.
Add new comment