அரசியலமைப்பின் 20ஆவது திருத்தத்தில், சபாநாயகர் மஹிந்த யாபா அபேவர்தன கையெழுத்திட்டுள்ளார்.
இதன்மூலம், இன்று முதல் (29) 20ஆவது திருத்தம் அமுலுக்கு வருவதாக பாராளுமன்ற செயலாளர் நாயகம் தெரிவித்தார்.
கடந்த ஒக்டோபர் 21 மற்றும் 22ஆம் திகதி இடம்பெற்ற இரு நாள் விவாதத்தை தொடர்ந்து, அரசியலமைப்பின் 20ஆவது திருத்தம் 2/3 பெரும்பான்மையுடன் நிறைவேற்றப்பட்டிருந்தது.
இதற்கு ஆதரவாக எதிர்க்கட்சியைச் சேர்ந்த 8 எம்.பிக்கள் உள்ளிட்ட 156 பேரும் எதிராக 65 பேரும் வாக்களித்திருந்தனர். வாக்களிப்பின் போது மைத்திரிபால சிறிசேன சமூகமளித்திருக்கவில்லை.
இன்று (29) முற்பகல் 11.30 மணியளவில் சபாநாயகர் குறித்த திருத்தத்தில் கையெழுத்திட்டதாக அவர் தெரிவித்தார்.
இதன்போது பாராளுமன்ற பிரதிப் பொதுச்செயலாளர் நாயகமும், பணிக்குழாமின் பிரதானியுமான நீல் இத்தவலவும் பங்கேற்றிருந்தார்.
இதேவேளை, மருத்துவ கட்டளை திருத்தங்கள் குறித்தான விவாதத்தை எதிர்வரும் நவம்பர் 03 ஆம் திகதி மாத்திரம் எடுத்துக் கொள்ள, இன்று (29) இடம்பெற்ற பாராளுமன்ற அலுவல்கள் பற்றிய குழுக் கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டுள்ளது.
அத்துடன், ஒதுக்கீட்டுச் சட்டமூலத்தை எதிர்வரும் நவம்பர் 12ஆம் திகதி விவாதத்திற்கு எடுத்துக் கொள்ளவும் பாராளுமன்ற அலுவல்கள் பற்றிய குழுக் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளது.
Add new comment