கிழக்கில் டெங்கு பரவும் அபாயம்

- சூழலை சுத்தமாக வைத்திருக்குமாறு வேண்டுகோள்

கிழக்கு மாகாணத்தில் டெங்கு பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளதால், மக்கள் சுற்றுப்புறச் சூழலை சுத்தமாக வைத்திருக்குமாறு, கிழக்கு மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் ஏ.லதாகரன், பொதுமக்களிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.

கிழக்கு மாகாணத்தில் மட்டக்களப்பு, திருகோணமலை ஆகிய மாவட்டங்களில்  டெங்கு நோயாளர்கள் இனங்காணப்பட்டுள்ளதாகவும், நாட்டில் தற்போது ஏற்பட்டுள்ள கொவிட்-19 அசாதாரண சூழ்நிலையில் தற்பொழுது டெங்கு அபாயம்  அச்ச நிலையைத் தோற்றுவித்துள்ளது. ஆகையால், பொதுமக்கள் தங்களது வீடுகளையும், சுற்றுப்புறச் சூழலையும்  சுத்தமாக வைத்திருக்குமாறும்  கோரிக்கை விடுத்துள்ளார்.

கிழக்கு மாகாண சுகாதார சேவைகள் பணியகத்தில் இடம்பெற்ற  சந்திப்பின்போது, ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும்போதே, அவர் இதனை தெரிவித்தார்.

மட்டக்களப்பு மாவட்டத்தில் 281 நோயாளர்கள் இனங்காணப்பட்ட நிலையில், ஓட்டமாவடி பிரதேசத்தில்  114 நோயாளர்கள் இனங்காணப்பட்டுள்ளதாகவும், இந்த வாரம் மாத்திரம்  ஓட்டமாவடி பிரதேசத்தில் 48 நோயாளர்கள் இனங்காணப்பட்டுள்ளதாகவும், கிழக்கு மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் ஏ.லதாகரன் இதன்போது சுட்டிக்காட்டினார்.

குறிப்பாக, தேசிய டெங்கு தடுப்பு பிரிவினரின்  ஆய்வின்படி பெண்கள் மற்றும் சிறுவர்கள் அதிகளவில் டெங்கு நோயினால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், டெங்கு நுளம்புகள் வீட்டினுள் காணப்படுவதாகவும் வீடுகளை சுத்தமாக வைத்திருப்பதுடன், சுற்றுப்புறச் சூழலையும் சுத்தமாக வைத்திருக்குமாறும், கிழக்கு மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் ஏ.லதாகரன் பொது மக்களிடம் கேட்டுக்கொண்டுள்ளார்.

(ரொட்டவெவ குறூப் நிருபர் - அப்துல்சலாம் யாசீம்)


Add new comment

Or log in with...