தங்கவேலாயுதபுரத்தில் 3 உள்ளூர் துப்பாக்கிகள் மீட்பு

அம்பாறை, திருக்கோவில் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட தங்கவேலாயுதபுரம் காட்டுப்பகுதியில் மறைத்து வைக்கப்பட்ட நிலையில் 3 உள்ளூர் துப்பாக்கிகளை இராணுவத்தினர் கைப்பற்றியுள்ளதாக, பொலிசார் தெரிவித்தனர்.

திருக்கோவில், காஞ்சிரம்குடா முகாம் இராணுவத்தினருக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலின் அடிப்படையில் இராணுவத்தினர் விரைந்து குறித்த துப்பாக்கிகளை நேற்று (26) மாலை கைப்பற்றியுள்ளனர்.

இராணுவத்தினரால் கைப்பற்றப்பட்ட துப்பாக்கிகள், திருக்கோவில் பொலிசாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக,  இராணுவத்தினர் தெரிவித்தனர்.

இது தொடர்பான விசாரணைகளை திருக்கோவில் பொலிசார் மேற்கொண்டு வருகின்றனர்.

இதேவேளை, கடந்த இரு வாரங்களுக்குள் இராணுவத்தினர் மற்றும் பொலிசாரினால் 23 உள்ளூர் தயாரிப்பு துப்பாக்கிகள் கைப்பற்றப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

(திருக்கோவில் தினகரன் நிருபர் - எஸ். கார்த்திகேசு)


Add new comment

Or log in with...