அதிகரித்த உப்பு விலையை குறைக்க டக்ளஸ் நடவடிக்கை

திடீரென ஏற்பட்ட உப்பு விலை அதிகரிப்பைக் குறைப்பதற்கு  கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா நடவடிக்கை மேற்கொண்டுள்ளார்.

மாந்தை உப்பு நிறுவனத்தினால் குறித்த விலை அதிகரிப்பு தொடர்பான அறிவித்தல் நேற்று (26) வெளியிடப்பட்ட நிலையில், குறித்த விடயம் தொடர்பாகவும் அதனால் ஏற்படக்கூடிய பாதிப்புக்கள் தொடர்பாகவும் பிரதேச மக்களினால் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவின் கவனத்திற்கு கொண்டு வரப்பட்டது.

இதனையடுத்து கைத்தொழில் அமைச்சர் விமல் வீரவன்சவுடன் குறித்த விடயம் தொடர்பாக கலந்துரையாடிய அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, இதுவரை காலமும் 50 கிலோகிராம் உப்பு மூட்டை 675 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டு வந்த நிலையில் தற்போது மாந்தை உப்பு நிறுவனத்தினால் 950 ரூபாய் விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளமையை தெரியப்படுத்தியதுடன், மக்களுக்கு ஏற்படக்கூடிய பாதிப்புக்கள் தொடர்பாகவும் தெளிவுபடுத்தினார்.

குறிப்பாக, கடலுணவு விளைச்சல் தற்போதைய மாத காலப் பகுதியில் அதிகளவில் காணப்படுகின்ற நிலையில், கொவிட்-19 காரணமாக அவற்றை ஏற்றுமதி செய்யவோ, விற்பனை செய்யவோ முடியாத சூழல் காணப்படுகின்றது.

இதனால், கடற்றொழிலாளர்கள் கருவாட்டு உற்பத்தியை முடியுமானளவு அதிகரிக்குமாறு கடற்றொழில் அமைச்சினால் ஆலோசனை வழங்கப்பட்டு வருகின்றது. இந்நிலையில், கருவாடு பதனிடுவதற்கு பயன்படுத்தப்படுகின்ற உப்பின் விலை அதிகரிப்பானது பல்வேறு தளங்களில் தாக்கங்களை ஏற்படுத்தும் எனவும் சுட்டிக்காட்டினார்.

அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவின் கருத்துகளை ஏற்றுக்கொண்ட அமைச்சர் விமல் வீரவன்ச, சம்மந்தப்பட்ட தரப்புகளுடன் கலந்துரையாடி உப்பின் விலையை குறைப்பதற்கு நடவடிக்கை மேற்கொள்வதாக உறுதியளித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.


Add new comment

Or log in with...