ஐந்து மாவட்டங்களில் கொரோனா தீவிரம்; ஏனைய மாவட்டங்களுக்கும் பரவும் அபாயம்

கொவிட் 19 வைரஸ் பரவியுள்ள கொழும்பு, கம்பஹா, களுத்துறை, குருணாகலை மற்றும் கேகாலை மாவட்டங்களிலிருந்து ஏனைய மாவட்டங்களுக்கு மிகவும் விரைவாக வைரஸ் பரவக் கூடிய அபாயநிலை தோன்றியுள்ளதாக அரச மருத்துவ அதிகாரிகள் சங்கத்தின் தலைவர் ஹரித அளுத்கே தெரிவித்துள்ளார்.    அரசாங்கம் இந்த ஐந்து மாவட்டங்கள் குறித்து உடனடியாக தீர்க்கமான முடிவொன்றை எடுக்க வேண்டுமெனவும் அவர் வேண்டுகோள் விடுத்துள்ளார். 

கொவிட் 19 நெருக்கடி தொடர்பில் நேற்று சனிக்கிழமை ஊடகங்களுக்கு கருத்து வெளியிடும் போதே அவர் இவ்வாறு கூறியுள்ளார். 

கண்டறியப்படும் அனைத்து நோயாளர்களும் மினுவாங்கொடை தொழிற்சாலை ஊழியர்களுடன் ஏதோ ஒருவிதத்தில் தொடர்பை பேணியவர்கள்தான் என தொற்று நோய் பிரிவின் பணிப்பாளர் தெரிவித்துள்ளார். இங்கு வைரஸ் எவ்வாறு பரவியதென தெரிவிக்க வேண்டும். எவ்வாறு வைரஸ் பரவியதென கண்டறியப்படாதுள்ளது. 

சமூகத் தொற்று இல்லையென தொற்றுநோய் தடுப்பு பிரவு கூறினாலும், சமூகத் தொற்றுக்கான கட்டத்தை எட்டியுள்ளோம். இன்றோ, நாளையோ அல்லது அடுத்தவாரமோ சமூகத் தொற்று ஏற்படுமென்ற நிலைக்கே நாம் வந்துள்ளோம். சமூகத் தொற்று ஏற்படும் பட்சத்தில் நாம் எடுக்கும் அனைத்து நடவடிக்கைகளும் தலைக்கீழாக மாறிவிடும். 

கொவிட் 19 வைரஸ் பரவியுள்ள கொழும்பு, கம்பஹா, களுத்துறை, கேகாலை, குருணாகலை ஆகிய 5 மாவட்டங்கள் அவதானம் மிகுந்த மாவட்டங்களாக மாறியுள்ளன. இந்த மாவட்டங்களிலிருந்து ஏனைய மாவட்டங்களுக்கு துரிதமாக பரவக்கூடிய நிலை ஏற்பட்டுள்ளது. அதனால் அவதானம் மிகுந்த இந்த 5 மாவட்டங்கள் தொடர்பில் எடுக்க வேண்டிய சிறந்த தீர்மானத்தையாவது அரசாங்கம் உடனடியாக எடுக்க வேண்டும். இந்த விடயத்தை நாம் ஜனாதிபதி செயலணிக்கும் தெளிவுப்படுத்தியுள்ளோம் என்றார்.

கொரோனா தொற்றினால் 15 ஆவது உயிரிழப்பு  

இலங்கையில் 15 வது கொரோனா வைரஸ் தொற்று நோயாளியின் மரணம் பதிவாகியுள்ளதாக சுகாதார அமைச்சு அறிவித்துள்ளது.  இந்த மரணத்துடன், இலங்கையில் கொவிட் 19 வைரஸ் தொற்றுக்கு உள்ளாகி உயிரிழந்துள்ளவர்களின் எண்ணிக்கை 15ஆக அதிகரித்துள்ளது.    குளியாப்பிட்டிய ஊரலிய கித்தவல பகுதியை சேர்ந்த 56 வயதுடையே நபரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.    இவர் இதய நோய் மற்றும் சிறுநீரக நோய் காரணமாக கடந்த 14ஆம் திகதி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இவருக்கு நோய் நிலையும் தீவிரமடைந்துள்ளது. என்றாலும், கொவிட் 19 வைரஸ் தொற்றுக்கு உள்ளானவராக இவர் அடையாளம் கண்டறியப்பட்டபின்னரே உயிரிழந்துள்ளதாகவும் சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் தெரிவித்துள்ளார்.  

அவர் இருதய நோயாளியென கடந்த 14 ஆம் திகதி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இந்த வார தொடக்கத்தில் இலங்கை 14 ஆவது கொரோனா வைரஸ் தொடர்பான மரணத்தை பதிவு செய்தது.  
அங்கொடை ஐடிஎச் தொற்று நோய்கள் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்த குளியாப்பிட்டியைச் சேர்ந்த 50 வயது பெண் ஒருவர் உயிரிழந்தார்.  

அந்த பெண் வைரஸ் பாதித்த நேரத்தில் நிமோனியா மற்றும் இருதய நோயால் பாதிக்கப்பட்டதாக கூறப்படுகிறது.  
இதற்கு முன்னர் இலங்கையில் 13 ஆவது கொரோனா வைரஸ் தொடர்பான மரணம் செப்டம்பர் 14 ஆம் திகதி அன்று பதிவாகியது. சிலாபம் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த 60 வயதுடை நோயாளி சிகிச்சை பலனின்றி உயிரிழந்தமை குறிப்பிடத்தக்கது.

சுப்பிரமணியம் நிஷாந்தன் 


Add new comment

Or log in with...