ஏழு வயது சிறுவன் ஒருவரின் உடலில் பட்டாசு கொழுத்திய சம்பவம் ஒன்று நேற்று முன்தினம் (18) நிவித்திகல பிரசேத்தில் இடம்பெற்றுள்ளது.
இரு குடும்பத்தினருக்கிடையில் ஏற்பட்ட மனக்கசப்பு காரணமாக பக்கத்து கடை முதலாளி ஒருவர் ஏழு வயது சிறுவனின் உடலில் பட்டாசு கொழுத்தி போட்டதில் சிறுவனின் முகம் பலத்த காயங்களுக்குள்ளான நிலையில் இரத்தினபுரி போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக நிவித்திகல பொலிசார் தெரிவித்தனர்.
மேற்படி காயமடைந்த சிறுவன் நிவித்திகலை பிங்கந்த தோட்ட பிரிவை சேர்ந்த தமிழ் பாடசாலை ஒன்றில் தரம் இரண்டில் கல்வி கற்கும் மாணவன் எனவும் தெரிவிக்கப்படுகின்றது.
மேற்படி சம்பவம் குறித்து தெரிய வருவதாவது,
சம்பவம் தினத்தன்று சிறுவனின் தாய் வேலைக்கு சென்றதாகவும் தந்தை தனது தேவைக்காக கொழும்புக்கு சென்றதாகவும் தெரிவிக்கப்படுவதோடு, சிறுவன் காலை 9.00 மணியளவில் சந்தேகநபரின் கடை முன் வீதியில் நடந்து சென்று கொண்டிருந்தவேளை சந்தேகநபரான கடை முதலாளி சிறுவன் மீது பட்டாசு கொழுத்தி போட்டதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
மேற்படி சம்பவம் குறித்து பொலிசார் மேலதிக விசாரணைகளை நடாத்தி வருவதோடு தலைமறைவாகி உள்ள சந்தேகநபரை தேடி பொலிசார் வலை விரித்துள்ளனர்.
(காவத்தை தினகரன் விசேட நிருபர் - சிவா ஸ்ரீதரராவ்)
Add new comment