ரிஷாட் பதியுதீனுக்கு ஒக்டோபர் 27வரை விளக்கமறியல்

ரிஷாட் பதியுதீனுக்கு ஒக்டோபர் 27வரை விளக்கமறியல்-Rishad Bathiudeen Remanded Till Oct 27
படம்: சுலோச்சன கமகே

- பெண் வைத்தியர் உள்ளிட்ட 7 பேருக்கும் ஒக். 27 வரை விளக்கமறியல்

குற்றப் புலனாய்வு திணைக்களத்தினால் கைது செய்யப்பட்ட பாராளுமன்ற உறுப்பினர் ரிஷாட் பதியுதீனுக்கு எதிர்வரும் 27ஆம் திகதி வரை விளக்கமறியல் விதிக்கப்பட்டுள்ளது.

அவரை இன்று (19) பிற்பகல் கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படுத்தியபோது, நீதவான் குறித்த உத்தரவை வழங்கினார்.

இதேவேளை, தேடப்பட்டு வந்த ரிஷாட் பதியுதீனுக்கு அடைக்கலம் வழங்கிய குற்றச்சாட்டில் இன்று (19) கைதான, பெண் வைத்தியர் உள்ளிட்ட 7 பேருக்கும் எதிர்வரும் ஒக்டோபர் 27ஆம் திகதி வரை விளக்கமறியல் விதிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

கடந்த 2019 ஜனாதிபதித் தேர்தலின் போது, மீள்குடியேற்ற அமைச்சராக இருந்த ரிஷாட் பதியுதீன், 222 ​​இ.போ.ச. பஸ்கள் மூலம் இடம்பெயர்ந்த வாக்காளர்களை மன்னாருக்கு இடம்பெயர்ந்த வாக்காளர்களை மன்னாருக்கு அழைத்துச் சென்றதன் மூலம் தேர்தல் சட்டங்களை மீறியமை மற்றும் அரசாங்கத்திற்கு சொந்தமான குறித்த அமைச்சின் கீழிருந்த ரூபா 95 இலட்சத்திற்கும் அதிகமான நிதியை முறைகேடாக பயன்பத்தியமை ஆகிய பொதுச் சொத்துக்களை முறைகேடாக பயன்படுத்தியமை மற்றும் தேர்தல் சட்டங்களை மீறிய குற்றச்சாட்டின் பேரில், 1981ஆம் ஆண்டு இலக்கம் 15 ஜனாதிபதித் தேர்தல் சட்டத்தின் 82 (1) பிரிவுக்கு அமைய, குற்றம்சாட்டப்பட்டுள்ளது.

குறித்த குற்றச்சாட்டு தொடர்பில், அப்போதைய கைத்தொழில் வர்த்தக அமைச்சர் ரிஷாட் பதியுதீன், அப்போதைய மீள்குடியேற்ற திட்ட பணிப்பாளர் சம்சுதீன் மொஹமட் யாசீன், மீள்குடியேற்ற திட்ட முன்னாள் கணக்காளர் அழகரத்னம் மனோரஞ்சன் ஆகிய மூன்று பேர் மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

குறித்த குற்றச்சாட்டு தொடர்பில் அவரை கைது செய்யுமாறு சட்ட மாஅதிபர் விடுத்த உத்தரவைத் தொடர்ந்து, கடந்த 5 நாட்களாக தேடப்பட்டு வந்த அவர் இன்று (19) அதிகாலை, கொஹுவல - களுபோவில பகுதியில் உள்ள வீட்டிலிருந்த வேளையில் கைது செய்யப்பட்டிருந்தார்.

இதனைத் தொடர்ந்து, ரிஷாட் பதியுதீன் எம்.பி. தலைமறைவாக இருப்பதற்கு உதவி புரிந்து அடைக்கலம் வழங்கிய குற்றச்சாட்டில் பெண் வைத்தியர் உள்ளிட்ட 7 பேர் கைது செய்யப்பட்டிருந்தனர்.

இதேவேளை, தான் கைது செய்யப்படுவதை தடுக்கும் உத்தரவை வழங்குமாறு, பாராளுமன்ற உறுப்பினர் ரிஷாட் பதியுதீன், மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் ரிட் மனுவொன்றை தாக்கல் செய்துள்ளதோடு, குறித்த மனு நாளையதினம் (20) எடுத்துக் கொள்ளப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.


Add new comment

Or log in with...