- 40 வாகனங்கள் கைப்பற்றல்
- 24 மணித்தியாலங்களில் 25 பேர் கைது
19 பொலிஸ் பிரிவுகளிலும் தொடர்ந்தும் தனிமைப்படுத்தல் ஊரடங்குச் சட்டம் அமுலில் உள்ளதாகவும், அதனை மீறிய 25 பேர் கடந்த 24 மணித்தியாலங்களில் கைது செய்யப்பட்டுள்ளதாகவும், பொலிஸ் ஊடகப் பேச்சாளர், பிரதிப் பொலிஸ் மாஅதிபர் அஜித் ரோஹண தெரிவித்தார்.
அதற்கமைய, கடந்த ஞாயிற்றுக்கிழமை (11) முதல் அமுலில் உள்ள தனிமைப்படுத்தல் பொலிஸ் ஊரடங்குச் சட்டத்தை மீறிய 167 பேர் இதுவரை கைது செய்யப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார்.
அத்துடன், ஊரடங்குச் சட்டத்தை மீறி பயணித்த முச்சக்கரவண்டிகள், மோட்டார் சைக்கிள்கள் உள்ளிட்ட 40 வாகனங்களை கைப்பற்றியுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
எனவே, பொதுமக்கள் தனிமைப்படுத்தல் ஊரடங்குச் சட்டத்தை மதித்து நடக்குமாறு அவர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
அதே போன்று, குறித்த பிரதேசங்களில் இன்று (16) காலை 8.00 மணி முதல் இரவு 10.00 மணி வரை 14 மணித்தியாலங்களுக்கு, உணவுப் பொருட்கள் விற்பனை செய்யும் வர்த்தக நிலையங்கள் மற்றும் மருந்தகங்களை திறக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
சுகாதார நடைமுறைகளை இறுக்கமாகப் பேணி, பொதுமக்கள் தங்களுக்கு அத்தியாவசியமான பொருட்களை கொள்வனவு செய்யுமாறு அவர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
இதேவேளை, நாளை மற்றும் நாளைமறுதினம் ஆகிய வார இறுதி நாட்களில் எவ்வித வர்த்தக நிலையங்களும் திறக்கப்படாது என அவர் மேலும் தெரிவித்தார்.
இதேவேளை, ஊரடங்குச் சட்டம் அமுலில் உள்ள பிரதேசங்களின் ஊடாக பயணிக்கும் பொதுப் போக்குவரத்து சேவை உள்ளிட்ட அனைத்து வாகனங்களும் குறித்த பிரதேசங்களில் க.பொ.த. உயர் தரப் பரீட்சைக்குத் தோற்றும் மாணவர்களை தவிர பயணிகளை ஏற்றவோ, இறக்கவோ அனுமதிக்கப்படமாட்டார்கள் என அஜித் ரோஹண தெரிவித்தார்.
இதேவேளை, பொலிஸ் ஊரடங்குச் சட்டம் அமுல்படுத்தப்படாத பிரதேசங்களில் கூட, கொவிட்-19 தொற்று நிலை ஏற்படுவதற்கான வாய்ப்புகள் காணப்படுவதால், முகக்கவசம் அணிதல், கைககளை கழுவுதல், சமூக இடைவெளியைப் பேணுதல் உள்ளிட்ட சுகாதார வழிகாட்டல் விடயங்களை பொதுமக்கள் எப்போதும் கடைப்பிடிக்க வேண்டும் என அவர் வலியுறுத்தியுள்ளார்.
Add new comment