உக்ரைன் விமான விபத்தில் 26 பேர் பலி

உக்ரைனில் இராணுவ விமானம் விபத்துக்குள்ளானதில் பலியானோர் எண்ணிக்கை 26ஆக அதிகரித்துள்ளது.  

இராணுவத்துக்குச் சொந்தமான சரக்கு விமானத்தில் விமானப்படை வீரர்கள் பயிற்சியில் ஈடுபட்டிருந்தனர். இந்த பயிற்சியில் விமானத்தை தரையிறக்க முயன்றபோது திடீரென விபத்தில் சிக்கியது.  

இதில் 26பேர் பலியான நிலையில், ஒருவர் கவலைக்கிடமாக உள்ளார். விமானம் விபத்துக்குள்ளானபோது சிலர் அதிலிருந்து வெளியே குதித்ததாகவும் கூறப்படுகிறது.  

விமானத்திலுள்ள இரட்டை என்ஜின்களில் ஒரு என்ஜின் கோளாறானதே விபத்துக்கு காரணம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.  

இந்த விபத்தின் காரணமாக ஒருநாள் தேசிய தூக்கம் அறிவித்துள்ள உக்ரைன் ஜனாதிபதி வோலோடிமிர் ஜெலன்ஸ்கி விபத்து குறித்து உடனடியாக விசாரணை நடத்தப்பட வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளார்.  

உக்ரைனின் கிழக்குப் பகுதியில் ரஷ்ய ஆதரவு பிரிவினைவாதிகள் உக்ரைன் அரசுடன் போராடி வருகிறார்கள். ஆனால் அவர்களுக்கும் இந்த விபத்துக்கும் தொடர்பு இருப்பதாக இதுவரை தெரியவில்லை.    


Add new comment

Or log in with...