தீ விபத்திற்குள்ளான MT New Diamond கப்பலின் உரிமையாளர்கள் மொத்தமாக ரூபா 442 மில்லியனை இலங்கைக்கு நட்ட ஈடாக வழங்குவதற்கு இணங்கியுள்ளதாக, சட்ட மாஅதிபரின் ஒருங்கிணைப்பு அதிகாரி, சட்டத்தரணி நிஷாரா ஜயரத்ன தெரிவித்துள்ளார்.
குறித்த விடயத்தை கப்பலின் உரிமையாளர்களினால் சட்ட மாஅதிபர் தப்புல டி லிவேராவுக்கு அறிவித்துள்ளதாக அவர் தெரிவித்தார்.
கடந்த செப்டெம்பர் 15ஆம் திகதி வரையான காலப்பகுதியில், MT New Diamond கப்பலில் ஏற்பட்ட தீயை அணைப்பது உள்ளிட்ட பராமரிப்பு நடவடிக்கைகளுக்காக, கடற்படை, வான்படை உள்ளிட்ட இலங்கை அரசாங்கத்தின் அனைத்து பிரிவினராலும் மேற்கொள்ளப்பட்ட தீயணைப்பு, மீட்பு, பராமரிப்பு செலவாக ரூபா 340 மில்லியனை (ரூ. 34கோடி) நஷ்டஈடாக செலுத்துமாறு சட்ட மாஅதிபர் தப்புல டி லிவேரா, கோரியிருந்தார்.
அதற்கு குறித்த கப்பல் நிறுவன உரிமையாளர்கள் இணக்கம் தெரிவித்திருந்தனர்.
இதனைத் தொடர்ந்து, மேற்கொள்ளப்பட்ட மொத்த கணக்கெடுப்பிற்கு அமைய, கடந்த வியாழக்கிழமை (24) மேலும் ரூ. 100 மில்லியனை நஷ்டஈடாக வழங்குமாறு சட்ட மாஅதிபர் குறித்த நிறுவனத்திடமிருந்து கோரியிருந்தார்.
அதற்கமைய மொத்தமாக, ரூபா 442 மில்லியனை வழங்க குறித்த கப்பல் நிறுவன உரிமையாளர்கள் உறுதியளித்துள்ளதாக, அவர்களது சட்டத் தரணிகள் ஊடாக, சட்ட மாஅதிபருக்கு அறிவித்துள்ளதாக, சட்ட மாஅதிபரின் ஒருங்கிணைப்பு அதிகாரி, அரச சட்டத்தரணி நிஷாரா ஜயரத்ன தெரிவித்துள்ளார்.
Add new comment