சிறுத்தை இறைச்சி விற்ற கணவன், மனைவி உள்ளிட்ட மூவர் கைது

கண்டி, உடுதும்பற பகுதியில் சிறுத்தையொன்றை கொன்று, அதன் இறைச்சியை விற்பனை செய்துகொண்டிருந்த கணவன், மனைவி உட்பட மூவர், உடுதும்பற பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

குறித்த இறைச்சியை விற்பனை செய்வதற்காக பயன்படுத்தப்பட்ட முச்சக்கரவண்டியொன்றையும் பொலிஸார் கைப்பற்றியுள்ளனர்.

இது தொடர்பில் பொலிஸாருக்கு கிடைத்த தகவலுக்கமைய முன்னெடுக்கப்பட்ட விசாரணையின்போது, சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

உடுதும்பற, கலல்கமுவ பிரதேசத்தில் பன்றிகளுக்கு வைத்த பொறியில் குறித்த சிறுத்தை சிக்கியுள்ளதாக ஆரம்பக்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.

ஆண் சந்தேகநபர்கள் இருவரினால் குறித்த சிறுத்தை கொல்லப்பட்டுள்ளதோடு, பெண் சந்தேகநபரும் இதில் இணைந்துள்ளதாகவும் தெரியவந்துள்ளது.

இச்சந்தேகநபர்கள் கலல்கமுக மற்றும் வேரபிட்டிய பிரதேசங்களைச் சேர்ந்தவர்களாவர்.

மேலும், இச்சந்தேகநபர்களில் ஒருவரின் வீட்டைச் சோதனையிட்டபோது, கொல்லப்பட்ட சிறுத்தையின் இறைச்சி மற்றும் அதன் உடற்பாகங்கள் மீட்கப்பட்டுள்ளன.

இச்சம்பவம் தொடர்பில் உடுதும்பற பொலிஸார் விரிவான விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.


Add new comment

Or log in with...