முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, அவரது பிரத்தியேக செயலாளர் மற்றும் கொழும்பின் மூன்று துணை ஆயர்களுக்கு கடுமையான எச்சரிக்கைகளை விடுக்கப்பட்டுள்ளது.
ஆணைக்குழு முன் சாட்சியமளிக்கும் சாட்சிகள் அளித்த கருத்துக்களை மறுத்து சர்ச்சைக்குரிய வகையில் ஊடகங்களுக்கு ஊடக வெளியீடுகளை வெளியிட வேண்டாமென, உயிர்த்த ஞாயிறு பயங்கரவாத தாக்குதல்கள் தொடர்பில் விசாரணை செய்யும் ஜனாதிபதி ஆணைக்குழுவினால் இவ்வாறு கண்டனம் வெளியிடப்பட்டுள்ளது.
இன்று (24) ஆணைக்குழுவில் முன்னிலையில் ஆஜராகுமாறு முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, அவரது செயலாளர் மற்றும் மூன்று துணை ஆயர்களுக்கும் நேற்றையதினம் (23) ஆணைக்குழுவினால் அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது.
ஆணைக்குழுவை குறைத்து மதிப்பிடும் வகையில் ஊடகங்களுக்கு அண்மையில் வெளியிட்ட அறிக்கைகள் தொடர்பில் அவர்களிடம் வாக்குமூலம் பதிவு செய்ய இவ்வாறு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
கட்டளையிடும் தளபதியாகவும், பாதுகாப்பு அமைச்சிற்கு பொறுப்பானவராகவும், சட்ட ஒழுங்கிற்கு பொறுப்பான அமைச்சர் என்ற வகையிலும், முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினால் உயிர்த்த ஞாயிறு தாக்குதல் முன்னெடுக்கப்பட்ட சமயத்தில் முன்னெடுக்கப்பட்ட நடவடிக்கைகள் திறனற்றதாக காணப்பட்டதாக, முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் ஹேமசிறி பெனாண்டோ, குறித்த ஆணைக்குழுவில், கடந்த வாரம் வழங்கிய வாக்குமூலம், முற்றிலும் பொய்யானது என, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் பிரத்தியேக செயலாளர் கடந்த ஞாயிற்றுக்கிழமை (20) அறிக்கையொன்றை வெளியிட்டிருந்தார்.
அதே போன்று, குறித்த ஆணைக்குழுவில் பாராளுமன்ற உறுப்பினர் ஹரின் பெனாண்டோ கடந்த வியாழக்கிழமை (17) வழங்கிய வாக்குமூலத்தை மறுக்கும் வகையில் கொழும்பின் மூன்று துணை ஆயர்களும் இணைந்து ஊடக அறிக்கையொன்றை வெளியிட்டிருந்தனர்,
Add new comment