உயிர்த்த ஞாயிறு பயங்கரவாத தாக்குதல் சம்பவத்தை தடுக்க நடவடிக்கை எடுக்காமை தொடர்பாக முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் ஹேமசிறி பெனாண்டோ மற்றும் கட்டாய விடுமுறையிலுள்ள முன்னாள் பொலிஸ் மா அதிபர் பூஜித் ஜயசுந்தர ஆகியோருக்கு எதிராக முன்னெடுக்கப்பட்டு வந்த விசாரணை நடவடிக்கைகள் நிறைவுக்கு வந்துள்ளதாக, கொழும்பு நீதவான் நீதிமன்றத்திற்கு குற்றப்புலனாய்வுத் திணைக்களம் அறிவித்துள்ளது.
இது தொடர்பான விசாரணை, கொழும்பு மேலதிக நீதவான் ஆர்.யூ. ஜயசூரிய முன்னிலையில் இன்று (23) எடுத்துக்கொள்ளப்பட்டது.
போதியளவான புலனாய்வுத் தகவல் கிடைத்த போதிலும், குறித்த தாக்குதலை தடுக்க நடவடிக்கை எடுக்கத் தவறியதன் மூலம் தமது கடமையை உரிய முறையில் செய்யாமை மற்றும் கொலைக் குற்றச்சாட்டு ஆகிய குற்றச்சாட்டுகள் அவர்கள் மீது சுமத்தப்பட்டது.
இது தொடர்பான விசாரணை நடத்திய குற்றப்புலனாய்வுத் திணைக்கள அதிகாரிகள், விசாரணை நிறைவுக்கு வந்துள்ளதாகவும், அவர்கள் மீது எதிர்காலத்தில் எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் தொடர்பில் சட்ட மாஅதிபரின் ஆலோசனையை கோரியுள்ளதாகவும் நீதிமன்றிற்கு அறிவித்துள்ளனர்.
Add new comment