சலுகை வழங்குவதாக ஒருபோதும் கூறவில்லை

பூஜித ஜயசுந்தரவுக்கு

ஈஸ்டர் தாக்குதல்களுக்கு பொறுப்பேற்று இராஜினாமா செய்தால், பல சலுகைகளை வழங்குவதாக முன்னாள் பொலிஸ் மா அதிபர் பூஜித் ஜயசுந்தரவுக்கு தான் ஒருபோதும் தெரிவிக்கவில்லை என்றும் அந்த குற்றச்சாட்டை நிராகரிப்பதாகவும் முன்னாள் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.

ஈஸ்டர் தாக்குதல் குறித்து விசாரிக்கும் ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவில் கடந்த வாரம் முன்னிலையாகிய முன்னாள் பாதுகாப்பு செயலாளர் ஹேமசிரி பெர்னாண்டோ குறித்த விடயம் தொடர்பாக கருத்து தெரிவித்திருந்தார்.

அதில் கடந்த வரும் ஏப்ரல் 24 ஆம் திகதி அன்று பயங்கரவாத தாக்குதல்களுக்கான பொறுப்பை ஏற்றுக்கொண்டு பதவியில் இருந்து விலகினால் சலுகைகளை வழங்குவதாக முன்னாள் பொலிஸ் மா அதிபர் பூஜித் ஜயசுந்தரவுக்கு அப்போதைய ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அறிவித்தார் என கூறியிருந்தார்.

இந்நிலையில் குறித்த விடயம் தொடர்பாக அறிக்கையொன்றினை வெளியிட்டுள்ள முன்னாள் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன, முன்னாள் பாதுகாப்பு செயலாளர் முன்வைத்த குற்றச்சாட்டுகளை மறுத்துள்ளார்.

அத்தோடு தனக்கு வாய்ப்பு கிடைத்தால் ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவில் முன்னிலையாகி இந்த விடயம் குறித்து சாட்சியமளிக்க தயாராக இருப்பதாகவும் குறிப்பிட்டுள்ளார்.


Add new comment

Or log in with...