திருகோணமலை, தம்பலகாமம் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பகுதியில் சுமார் 500 டெட்டனேட்டர் குச்சிகளுடன் முச்சக்கர வண்டி சாரதி ஒருவரை கைது செய்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
இச்சம்பவம் இன்று (18) காலை இடம்பெற்றுள்ளது.
இவ்வாறு கைது செய்யப்பட்டவர் கிண்ணியா அண்ணல் நகர் பகுதியைச் சேர்ந்த 54 வயதுடைய நபர் என பொலிஸார் தெரிவித்தனர்.
சம்பவம் குறித்து தெரியவருவதாவது, தம்பலகாமம் பிரதேசத்திலிருந்து கிண்ணியா நோக்கி வெடிக்க வைக்கும் கருவிகளை கொண்டு செல்வதாக தம்பலகாமம் விசேட பொலிஸ் பிரிவினருக்கு வழங்கப்பட்ட இரகசிய தகவலை அடுத்து கோவிலடி பகுதியில் முச்சக்கர வண்டியை சோதனையிட்டபோது அவரிடமிருந்து 500 டெட்டனேட்டர்கள் கைப்பற்றப்பட்டதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.
கைது செய்யப்பட்ட சந்தேகநபரை விசாரணை செய்து வருவதாகவும் விசாரணையின் பின்னர் கந்தளாய் நீதிமன்றில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளதாகவும் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருவதாகவும் தம்பலகாமம் பொலிஸார் தெரிவித்தனர்.
(திருமலை மாவட்ட விசேட நிருபர் - அப்துல் பரீட், ரொட்டவெவ குறூப் நிருபர் - அப்துல்சலாம் யாசீம், கந்தளாய் தினகரன் நிருபர் - எப். முபாரக்)
Add new comment