தன்சானிய பாடசாலையில் தீ: பத்து மாணவர்கள் பலி

தன்சானியாவின் வடமேற்கு ககாரா பிராந்தியத்தில் ஆரம்ப பாடசாலை ஒன்றில் ஏற்பட்ட தீயினால் அங்கு தங்கிருந்த பத்து மாணவர்கள் உயிரிழந்துள்ளனர்.

“தீப்பற்றி எரியும்போது அந்த தங்குமிடத்தில் 74 மாணவர்கள் இருந்துள்ளனர். அப்போது அவர்கள் தப்ப முயன்றபோதும் சிலரால் முடியாமல்போயுள்ளது” என்று பிராந்திய ஆணையாளர் மார்கோ ககுட்டி ரோய்ட்டர்ஸ் செய்தி நிறுவனத்திற்கு தெரிவித்துள்ளார்.
தீயில் கருகிய உடல்களை அடையாளம் காணும் பணியில் உறவினர்களுடன் பொலிஸார் ஈடுபட்டிருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
தீ ஏற்பட்டதற்கான காரணம் இன்னும் கண்டுபிடிக்கப்படவில்லை.
நள்ளிரவில் ஏற்பட்டிருக்கும் இந்தத் தீயில் மேலும் ஏழு மாணவர்கள் காயமடைந்துள்ளனர்.
தீயை கட்டுப்படுத்த ஊர் மக்கள் கடுமையாக போராடியதாகவும் இடிபாடுகள் மற்றும் எரிந்த இரும்புத் தகடுகளை அகற்றி உடல்கள் மீட்கப்பட்டதாகவும் அந்தப் பாடசாலை அமைந்திருக்கும் கிராமத்தின் தலைவர் குறிப்பிட்டுள்ளார்.
“எமது கிராமத்திற்கு இது சோகமான நாள். பெற்றோர்கள், உறவினர்கள் மற்றும் கிராமத்தினர் அழிவுக்கு முகம்கொடுத்திருக்கிறார்கள்” என்று அந்த கிராமத் தலைவர் குறிப்பிட்டுள்ளார்.


Add new comment

Or log in with...