விபத்தில் பொலிஸ் சார்ஜெண்ட் பலி; கான்ஸ்டபிள் காயம்

நிட்டம்புவ  பிரதேசத்தில் இடம்பெற்ற வாகன விபத்தில் பொலிஸ் சார்ஜெண்ட் ஒருவர் உயிரிழந்துள்ளதோடு, பொலிஸ் கான்ஸ்டபிள் ஒருவர் காயமடைந்துள்ளார்.

கொழும்பு – கண்டி  வீதியில் ஹொரகொல்ல பிரதேசத்தில் நேற்று (13) மாலை இவ்விபத்துச் சம்பவித்துள்ளது.

கண்டி நோக்கி சென்ற குறித்த மோட்டார் சைக்கிள், அதனை செலுத்தியவரின் கட்டுப்பாட்டை இழந்து, வீதியோரத்தில் நிறுத்தப்பட்டிருந்த கார் மற்றும் ஜீப் வாகனங்களுடன் மோதி விபத்திற்குள்ளானதாக, பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

இவ்விபத்தில் மோட்டார் சைக்கிளைச் செலுத்தி சென்றவரும் மோட்டார் சைக்கிளின் பின் ஆசனத்தில் அமர்ந்து சென்றவரும் காயமடைந்த நிலையில், வத்துபிட்டிவல வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதை தொடர்ந்து, மோட்டார் சைக்கிளைச் செலுத்தி சென்றவர் உயிரிழந்துள்ளார்..

பஸ்யால பிரதேசத்தைச் சேர்ந்தவரும் பேலியகொடை மாவட்ட போக்குவரத்து பிரிவில் கடமையாற்றியவருமான 48 வயதுடைய பொலிஸ் சார்ஜெண்ட் இச்சம்பவத்தில் உயிரிழந்துள்ளார்.

இவ்விபத்துச் சம்பவம் தொடர்பில் நிட்டம்புவ பொலிஸ் விரிவான விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.  


Add new comment

Or log in with...