வெளிநாட்டில் சிக்கியுள்ள 50,000 இலங்கையரின் எதிர்பார்ப்பை அரசு நிறைவேற்ற வேண்டும்

வெளிநாடுகளில் கொரோனா வைரஸ் காரணமாக தாய்நாடு திரும்ப முடியாமல் நிர்க்கதியாகியுள்ள சுமார் 50 ஆயிரம் இலங்கையரை நாட்டுக்கு திருப்பி அழைத்து வந்து அவர்களுடைய எதிர்பார்ப்பை நிறைவேற்றினால் மாத்திரமே கொரோனா ஒழிப்பு நடவடிக்கைகளில் அரசாங்கம் வெற்றி பெற்றதாக குறிப்பிட முடியுமென பாராளுமன்ற உறுப்பினர் மனோ கணேசன் நேற்று தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் இம்தியாஸ் பாக்கீர் மாக்கார் எம்பி நேற்று முன்வைத்த சபை ஒத்திவைப்பு வேளை பிரேரணை மீதான விவாதத்தில் உரையாற்றும் போதே மனோ கணேசன் எம்பி இவ்வாறு தெரிவித்தார்.

பாக்கீர் மாக்கார் எம்.பி தமது பிரேரணையில் வெளிநாடுகளில் 50 ஆயிரம் இலங்கையர்கள் தாய் நாடு திரும்ப முடியாமல் நிர்க்கதியான நிலையில் உள்ளதாகவும் அவர்களை விரைவாக இலங்கைக்கு அழைத்துவர அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார்.

அது தொடர்பில் மேலும் தெரிவித்த மனோ கணேசன் எம்பி;

45,000 மேற்பட்ட இலங்கையர்கள் இவ்வாறு வெளிநாடுகளில் நெருக்கடிக்கு உள்ளாகியுள்ளனர்.

எங்கள் நாட்டுக்கு அந்நிய செலவாணியை பெருமளவில் பெற்றுத்தரக்கூடிய பணிகளில் உள்ளவர்கள் இந்த நாட்டுக்கு மிக முக்கியமானவர்கள் அவர்களுடைய கண்ணீருக்கு அரசாங்கம் பதில் கூற வேண்டும்.

அவர்களை மிக விரைவில் இலங்கைக்கு அழைத்து வர நடவடிக்கை எடுக்க வேண்டும். அவரது குடும்பத்தாரும் அவர்களை நினைத்து கவலையுடன் வாழ்கின்றனர் .அவர்களை தாய்நாட்டுக்கு அழைத்து வரும் பொறுப்பை அரசாங்கம் முழுமையாக ஏற்று நிறைவேற்ற வேண்டும்.

அந்தந்த நாடுகளில் உள்ள தூதுவர்கள் இலங்கை அரசாங்கத்தின் வேண்டுகோளை எதிர்பார்த்துக் காத்திருக்கின்றார்கள். அரசாங்கம் அந்த வேண்டுகோளை விரைவாகவே வழங்க வேண்டும் எனக் கேட்டுக் கொள்கின்றோம் என்றும் அவர் மேலும் தெரிவித்தார்.

 

லோரன்ஸ் செல்வநாயகம், சுப்பிரமணியம் நிஷாந்தன்


Add new comment

Or log in with...