நியூ டயமண்ட் கப்பல் 40 கடல்மைல் தொலைவில் பாதுகாப்பான கடல் பரப்பில்
"MT New Diamond கப்பலின் தீயை அணைக்க தங்கள் உயிரைப் பணயம் வைத்த இலங்கை கடற்படை, இலங்கை விமானப்படை, இலங்கை துறைமுக அதிகாரசபை மற்றும் இந்திய பாதுகாப்புப் படைகளுக்கு எனது மனமார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக் கொள்வதோடு கடல் பல்லுயிரியலைப் பாதுகாப்பதில் உங்கள் பணியை நான் பெரிதும் பாராட்டுகிறேன்."
Thank you! to the #SLNavy , the #SLAirforce, the #SLPA and the Indian Defense Forces for their efforts in controlling the fires in MT New Diamond.
I greatly appreciate your Contribution in conserving Marine biodiversity by preventing a disastrous situation out in the ocean. pic.twitter.com/5kik3ErPwJ— Gotabaya Rajapaksa (@GotabayaR) September 5, 2020
இவ்வாறு தனது உத்தியோகபூர்வ ட்விற்றர் மற்றும் பேஸ்புக் கணக்கில் பதிவொன்றை இட்டுள்ளார், ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ.
MT New Diamond கப்பலின் பிரதான எஞ்சின் அறையிலுள்ள கொதிகலன் வெடித்ததைத் தொடர்ந்து ஏற்பட்ட தீ, நேற்று (04) மாலை 7.00 மணியளவில் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டு, தற்போது இலங்கையிலிருந்து 40 கடல் மைல் தொலைவில் பாதுகாப்பான கடல் பகுதிக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது.
கொதிகலன் வெடிப்பு காரணமாக, பிலிப்பைன்ஸ் நாட்டைச் சேர்ந்த ஒருவர் உயிரிழந்த நிலையில், மற்றுமொருவர் காயமடைந்து கல்முனை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார். ஏனையோர் கடற்படையினரால் பாதுகாப்பாக மீட்கப்பட்டிருந்தனர்.
நேற்று முன்தினம் (03) முற்பகல் 8.00 மணியளவில், சுமார் 270,000 மெற்ரிக் தொன் கச்சா எண்ணெயுடன் குவைத்திலிருந்து இந்தியா நோக்கிப் பயணித்த, MT New Diamond எனும் பாரிய எண்ணெய் தாங்கி கப்பல் , இலங்கைக்கு கிழக்கே உள்ள கடற்பரப்பில் அம்பாறை, சங்கமன்கண்டி பகுதியிலிருந்து 38 கடல் மைல் பகுதியில் தீப்பிடித்திருந்தது.
இதனைத் தொடர்ந்து, இலங்கை கடற்படை, இலங்கை வான்படை, இலங்கை துறைமுக அதிகாரசபை ஆகியன, இந்திய கரையோர பாதுகாப்புப் படையுடன் இணைந்து ஒன்றரை நாளாக மேற்கொண்ட தொடர் தீயணைப்பு மற்றும் மீட்புப் பணியைத் தொடர்ந்து, நேற்று (04) மாலை 7.00 மணியளவில் தீ கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டது.
நங்கூரமிடப்படாத குறித்த கப்பல், இலங்கையிலிருந்து 38 கடல் மைல் தொலைவிலிருந்த நிலையில் ஒன்றரை நாளில் இலங்கையை நோக்கி நகர்ந்து 25 கடல் மைல் தூரத்தை நெருங்கியிருந்தது. இதனைத் தொடர்ந்து கப்பலை பாதுகாப்பான கடல் பிரதேசத்திற்கு இழுத்துச் செல்ல நடவடிக்கை எடுக்கப்பட்டதோடு, அதனுடன் இணைந்தவாறு தீயை முற்றாக கட்டுப்படுத்தும் நடவடிக்கையும் தொடரப்பட்டு வருகின்றது.
தற்போது குறித்த கப்பல் இலங்கையை நோக்கி நகராத வகையில் இலங்கையிலிருந்து 40 கடல் மைல் தொலைவில் பேணப்பட்டு தீயை முற்றாக அணைக்கும் பணி தொடரப்பட்டு வருவதாக தெரிவிக்கப்படுகின்றது.
இதுவரை கடலுக்குள் எவ்விதமான எண்ணெய் கசிவும் ஏற்படவில்லை என, இந்திய கரையோர பாதுகாப்புப்படை அறிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
றிஸ்வான் சேகு முகைதீன்
Add new comment