- பாதுகாப்பான கடல் பிரதேசத்திற்கு கொண்டு செல்ல நடவடிக்கை
இலங்கைக்கு கிழக்கே உள்ள கடற்பரப்பில் தீப்பிடித்த, MT New Diamond எனும் பாரிய எண்ணெய் தாங்கி கப்பலில் ஏற்பட்ட தீ கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டுள்ளது.
இந்திய கரையோர பாதுகாப்புப்படை இதனை அறிவித்துள்ளது.
அதில் ஏற்பட்ட தீயை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரும் நடவடிக்கையில் நேற்று (03) முதல் இந்திய கரையோர பாதுகாப்புப்படையுடன் இணைந்து இலங்கை கடற்படை மற்றும் வான்படையினர் ஈடுபட்டிருந்தனர்.
இந்நிலையில் மாலை 7.00 மணியளவில் அதில் ஏற்பட்ட தீ கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டுள்ளது. சுமார் 270,000 மெட்ரிக் தொன் கச்சா எண்ணெயுடன் அனர்த்தத்திற்கு உள்ளான இக்கப்பலில் ஏற்பட்ட தீ கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டதன் மூலம், பாரிய அசம்பாவிதம் மற்றும் கடல் சுற்றாடல், கடல் உயிரினங்கள் பாதுகாக்கப்பட்டுள்ளதாக, சூழலியலாளர்கள் கருத்துத் தெரிவித்துள்ளனர்.
கப்பலின் பின்புறத்தில் உள்ள தீப்பிடித்த குறித்த பகுதியில் ஏற்படும் அபாயம், எண்ணெய் சேமிப்பு பகுதிக்கு விரைவாக செல்லாத வகையிலான சிறப்பம்சங்களுடன் குறித்த கப்பல் வடிவமைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இதனைத் தொடர்ந்து, குறித்த வெளிநாட்டு கப்பல் நிறுவனத்திற்குச் சொந்தமான 'ஏ.எல்.பி ‘விங்கர்’ (ALP ‘Winger’) ALP Winger இழுவைக் கப்பலுடன் குறித்த கப்பல் இணைக்கப்பட்டு, இந்திய கரையோர பாதுகாப்புப் படையின் விசேட குழுவினரினால் பாதுகாப்பான கடல் பகுதிக்குள் அக்கப்பலை கொண்டு செல்லும் நடவடிக்கையில், இந்திய கரையோர பாதுகாப்புப் படை ஈடுபட்டுள்ளது.
இது தொடர்பில், இலங்கை கடற்படை மற்றும் விமானப் படைக்கு, இந்திய கரையோரப் பாதுகாப்புப்படை மற்றும் குறித்த சர்வதேச நிறுவனம் நன்றி தெரிவித்துள்ளது.
இதேவேளை, அம்பாந்தோட்டை துறைமுகத்திலிருந்த இரண்டு ரஷ்ய கப்பல்கள், நேற்று (03) மீட்புப் பணியில் ஈடுபட்டு தேவையான உதவிகளை வழங்கிய பின்னர் நேற்று மாலையளவில் அங்கிருந்து புறப்பட்டுச் சென்றதாக இலங்கை கடற்படை தெரிவித்திருந்தது.
குவைத்திலிருந்து இந்தியாவுக்கு, கச்சா எண்ணெயை போக்குவரத்து செய்வதற்காக, கூலிக்கு அமர்த்தப்பட்ட குறித்த கப்பல் நேற்று (03) முற்பகல் 8.00 மணியளவில் அம்பாறை, சங்கமன்கண்டி பகுதியிலிருந்து 38 கடல் மைல் தொலைவில் பயணித்துக் கொண்டிருந்த, நிலையில், அதன் பிரதான எஞ்சின் அறையிலுள்ள கொதிகலன் வெடித்ததைத் தொடர்ந்து அதில் தீ பரவியிருந்தது.
இதில் பிலிப்பைன்ஸ் நாட்டைச் சேர்ந்த ஒருவர் உயிரிழந்துள்ள நிலையில், அதிலிருந்த 23 பணியாளர்களில் 22 பேரை இலங்கை கடற்படை மீட்டதோடு, இவ்விபத்தில் காயமடைந்த கப்பலின் மூன்றாவது பொறியியல் அதிகாரி உடனடியாக கல்முனை ஆதார வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டார்.
கப்பல் அனர்த்தம் தொடர்பான முழு விபரத்திற்கு: கிளிக் செய்க
றிஸ்வான் சேகு முகைதீன்
Add new comment