50 கி.கி. கஞ்சாவுடன் பெண் கைது

- நான்கு நாட்கள் தடுத்து வைத்து விசாரிக்க நீதிமன்றம் அனுமதி

கிளிநொச்சி, கண்டாவளை பிரதேச செயலாளர் பிரிவிற்குட்பட்ட முரசுமோட்டை பகுதியில் 50 கிலோகிராம் நிறையுடைய கஞ்சா பொதியுடன் இளம் குடும்ப பெண் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

குறித்த சம்பவம்நேற்று (20)  இடம்பெற்றுள்ளது. 

கிளிநொச்சி, இரணைமடு விமானப்படையினரால் வழங்கப்பட்ட தகவலுக்கு அமைய, கிளிநொச்சி புலனாய்வு பிரிவு பொறுப்பதிகாரி குறித்த தகவலை கிளிநொச்சி முல்லைத்தீவு மாவட்ட பிரதி பொலிஸ் மாஅதிபரின் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டதை அடுத்து, அவரது வழிநடத்தலில் கிளிநொச்சி தலைமை பொலிஸ் நிலைய பதில் கடமை பொறுப்பதிகாரி சம்பிக்க தலைமையிலான பொலிஸ் குழுவினரால் குறித்த கஞ்சா பொதியும், அதனை மறைத்து வைத்திருந்த குற்றத்திற்காக இளம் குடும்ப பெண்ணும் கைது செய்யப்பட்டுள்ளார்.

குறித்த சுற்றிவளைப்பு நடவடிக்கையினை விமானப்படையினர் மற்றும் புலனாய்வு பிரிவினரின் ஒத்துழைப்புடன் பொலிசார் மேற்கொண்டிருந்தனர்.

குறித்த சுற்றிவளைப்பின்போது வீட்டில் மறைத்து வைக்கப்பட்டிருந்த 50 கிலோகிராம் எடையுடைய கஞ்சா பொதி மீட்கப்பட்டுள்ளது,

கஞ்சா பொதி மீட்கப்பட்ட வீட்டிலிருந்த குடும்பப்பெண்ணே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.

கைது செய்யப்பட்ட பெண்ணை தடுத்து வைத்து விசாரிக்க கிளிநொச்சி மாவட்ட நீதவான் நீதிமன்றில் பொலிசாரால் கோரப்பட்ட அனுமதிக்கு அமைய, குறித்த பெண்ணை நான்கு நாட்கள் பொலிஸ் காவலில் தடுத்து வைத்து விசாரிக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

குறித்த கஞ்சா பொதி,கைது செய்யப்பட்ட பெண்ணின் கணவரால் கொண்டுவரப்பட்டது எனவும், குறித்த சுற்றிவளைப்பின்போது, குறித்த சந்தேக நபர் தப்பியோடியுள்ளதாகவும் ஆரம்பக்கட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

இது தொடர்பான மேலதிக விசாரணைகளை கிளிநொச்சி பொலிசார் தொடர்ந்து மேற்கொண்டு வருகின்றனர்.

(எஸ்.என். நிபோஜன்)


Add new comment

Or log in with...