காத்தான்குடியில் மூவருக்கு டெங்கு அடையாளம்

காத்தான்குடியில் மூன்று பேருக்கு டெங்கு அடையாளம் காணப்பட்டுள்ளதாக, காத்தான்குடி பொதுச் சுகாதார பரிசோதகர்கள் தெரிவித்தனர்.

காத்தான்குடி சுகாதார அலுவலக பிரிவிலுள்ள காத்தான்குடி முதலாம் குறிச்சி அல்அக்ஷா வீதியில் இருவருக்கும் புதிய காத்தான்குடி ஏ.எல்.எஸ்.மாவத்தையில் ஒருவருக்குமாக மூன்று பேருக்கு டெங்கு அடையாளம் காணப்பட்டுள்ளது.

கடந்த நான்கு மாதங்களுக்கு மேலாக காத்தான்குடியில் ஒருவருக்கும் டெங்கு அடையாளம் காணப்பட்டிராத நிலையில், இவ்வாரம் மூவருக்கு டெங்கு அடையாளம் காணப்பட்டுள்ளதாக தெரியவருகின்றது.

இதையடுத்து காத்தான்குடியில் சுகாதார அலுவலகத்தினால் சுகாதார வைத்திய அதிகாரி டாக்டர் யு.எல்.நசிர்தீனின் ஆலோசனையின் பேரில் பொதுச் சுகாதார பரிசோதகர்களின் வழிகாட்டலில் மருந்து தெளிக்கும் நடவடிக்கைகள் இடம்பெற்று வருகின்றன.

டெங்குஅடையாளம் காணப்பட்ட வீதிகள் மற்றும் வீடுகள் உட்பட பல இடங்களிலும் இந்த மருந்து தெளிக்கும் நடவடிக்கைகள் இடம்பெற்று வருகின்றன.

(புதியகாத்தான்குடி தினகரன் நிருபர்- எம்.எஸ். நூர்தீன்)


Add new comment

Or log in with...