தீ விபத்தினால் தொழிலாளர் குடியிருப்பு சேதம்

தலவாக்கலை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட தலவாக்கலை பெரிய கட்டுக்கலை தோட்டத்தில்   இன்று (14)  முற்பகல் 10.00 மணியளவில் ஏற்பட்ட திடீர் தீ விபத்தில்  தொழிலாளர் குடியிருப்பொன்று பகுதியளவில் சேதமடைந்துள்ளது.

இத்தீ விபத்து காரணமாக லயன் தொகுதியில் அமைந்திருந்த வீடுகளில்  ஒரு வீடு பகுதியளவில்  சேதமடைந்ததுடன், இவ்வீட்டில்  குடியிருந்த ஒரு குடும்பத்தைச் சேர்ந்த 05 பேர்  பாதிக்கப்பட்டுள்ளனர்.

வீட்டில் இருந்தவர்கள் கூச்சலிட்டதை அடுத்து அயலவர்கள் ஓடி வந்து தீயை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்துள்ளனர். இத்தீ விபத்தில் எவ்வித உயிர் ஆபத்தோ, காயங்களோ ஏற்படாத போதிலும் உடைமைகளுக்கு பலத்த சேதம்  ஏற்பட்டுள்ளன.

இத் தீவிபத்து காரணமாக  அத்தியாவசிய ஆவணங்கள், உடுதுணிகள், தளபாடங்கள் போன்றன சேதத்திற்கு உள்ளாகியுள்ளன. இத்தீ விபத்தில் பாதிக்கப்பட்ட  குடும்பத்தினர் தற்காலிகமாக அயலவர்களின் வீடுகளில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். இவர்களுக்கான நிவாரண உதவிகளை தோட்ட நிர்வாகமும் மற்றும் அப்பகுதி கிராம உத்தியோகத்தர்  ஊடாகவும் வழங்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.  இத்தீ விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை தலவாக்கலை பொலிஸார் மேற்கொண்டுள்ளனர்.

(தலவாக்கலை குறூப் நிருபர் - பி.கேதீஸ்)

 


Add new comment

Or log in with...