சஞ்சய் தத்துக்கு புற்றுநோய்; குணமடைய பிரபலங்கள் பிரார்த்தனை

பொலிவூட் திரையுலகில் முன்னணி நடிகராக இருக்கும் சஞ்சய் தத், புற்றுநோயால் பாதிக்கப்பட்டுள்ளதாக, இந்திய செய்திகள் தெரிவிக்கின்றன.
 
நடிகர் சஞ்சய் தத்துக்கு கடந்த  09ஆம் திகதி கடும் மூச்சுத்திணறல் மற்றும் லேசான நெஞ்சுவலி ஏற்பட்டது. இதனைத் தொடர்ந்து மும்பையில் உள்ள லீலாவதி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவர் பூரண நலம்பெற வேண்டி திரையுலக பிரபலங்கள், இரசிகர்கள் சமூக வலைத்தளங்களில் தெரிவித்து வருகின்றனர்.
 
இந்நிலையில், சஞ்சய் தத்திற்கு நுரையீரல் புற்றுநோய் பாதிப்பு இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. புற்றுநோய் சிகிச்சைக்காக  சஞ்சய் தத் அமெரிக்கா செல்ல இருப்பதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளன. இது குறித்து சஞ்சய் தத்தின் நெருங்கிய நட்பு வட்டாரங்கள் கூறுகையில்,  'சஞ்சய் தத்திற்கு  வந்துள்ள புற்றுநோய் குணப்படுத்தக் கூடியதுதான். எனினும்,கடுமையான மருத்துவ சிகிச்சை ஆகும். எனவே,அவர் உடனடியாக அமெரிக்கா செல்ல இருக்கிறார்' என்று தெரிவித்தன. 
 
முன்னதாக நேற்று மாலை தனது ட்விற்றரில் பதிவு ஒன்றை வெளியிட்ட சஞ்சய் தத், 'நண்பர்களே, மருத்துவ ரீதியிலான காரணங்களுக்காக நான் என் பணியிலிருந்து சிறிய ஓய்வை எடுத்துக்கொள்கிறேன். என் குடும்பத்தினரும் நண்பர்களும் என்னுடன் இருக்கின்றனர். எனது நலன்விரும்பிகள் எவரும் கவலைப்படவோ, தேவையின்றி எதுவும் ஊகிக்கவோ வேண்டாம் எனக் கேட்டுக்கொள்கிறேன். உங்கள் அன்பு மற்றும் நல்வாழ்த்துகளோடு நான் விரைவில் மீண்டும் திரும்பி வருவேன்' என்று தெரிவித்துள்ளார்.

Add new comment

Or log in with...