சி.ஐ.டி.யில் ரிஷாட் பதியுதீன் முன்னிலை

முன்னாள் அமைச்சர் ரிஷாட் பதியுதீன் இன்று (12) மீண்டும் குற்றப்புலனாய்வு திணைக்களத்தின் முன்னிலையில் ஆஜரானார்.

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் சம்பவம் தொடர்பில் முன்னெடுக்கப்பட்டு வரும் விசாரணை சம்பந்தமாக வாக்குமூலம் அளிக்க அவர் இவ்வாறு வரவழைக்கப்பட்டதாக, குற்றப்புலனாய்வுத் திணைக்கள தகவல்கள் தெரிவித்துள்ளன.

இதற்கு முன்னர் வவுனியா, ஈரப்பெரியகுளத்தில் அமைந்துள்ள குற்றப்புலனாய்வுத் திணைக்கள அலுவலகத்தில் முன்னாள் அமைச்சர் ரிஷாட் பதியுதீன் வாக்குமூலம் அளித்திருந்தார்.

ஆயினும், இன்று குற்றப்புலனாய்வு திணைக்கள  தலைமையகத்திற்கு வருகை தந்தபோது ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த அவர், இன்றையதினம் அழைக்கப்பட்டமைக்கான காரணம் தெரியவில்லை என, முன்னாள் அமைச்சர் ரிஷாட் பதியுதீன் தெரிவித்தார்.

இன்று காலை 9.30 மணியளவில் குற்றப்புலனாய்வு திணைக்களத்திற்கு வரவழைக்கப்பட்ட அவர், இன்னும் அங்கிருந்து வாக்குமூலம் அளித்து வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.


Add new comment

Or log in with...