அக்கரைப்பற்றில் 'மங்கிவ்வா' செயலி முறை அறிமுகம்

அக்கரைபற்று மாநகர சபை எல்லையில் பொது இடங்களில் காணப்படும்  குறைபாடுகள் மற்றும் திடீர் அனர்த்தங்கள் போன்றவைகளை உடனுக்குடன் அறிவித்து தீர்வு காணும் 'மங்கிவ்வா' (ManKiwwa) எனும் செயலியை அறிமுகம் செய்து வைத்துள்ளார் அக்கரைப்பற்று முதல்வர் மேயர் அதாஉல்லாஹ் அஹ்மத் சக்கி.

இந்த நவீன திட்டத்தின் வைபவ ரீதியான அங்குரார்ப்பண நிகழ்வு நேற்று செவ்வாய்க்கிழமை  மாநகர சபை ஹல்லாஜ் கேட்போர் கூடத்தில் மேயர்  தலைமையில் நடைபெற்றது.

பொது இடங்களில் குறைபாடுகளா? அனர்த்தங்களா? விபரீதங்களா? போன்றவைகளை கண்ணில் பட்டதுமே முறைப்பாடு செய்யும் வசதி இத்திட்டத்தின் மூலம் கிடைப்பதோடு மாத்திரமல்லாது காலதாமதம், காரியாலயம் வரவேண்டிய அவசியம்கூட இனி இல்லையென்றும் ஒரு கையடக்க ஸ்மார்ட் போன் தொலைபேசி ஒன்றே உங்கள் பணிகள் அனைத்தையுமே செய்யும் என்றும் தெரிவித்தார்.

மாநகர சபையின் எல்லையிலுள்ள டெங்கு நோய் அதிகரித்து காணப்படும் இடங்கள், அணைந்த வீதி மின் விளக்குகள், சிதைந்த பாதைகள், குவிக்கப்பட்டுள்ள கழிவுகள் தொடர்பாக பொதுமக்கள் ஸ்மார்ட் மூலமாக முறைப்பாடு செய்யலாம்.

'மங்கிவ்வா ஆப்'  பணிப்பாளர் சொஹான் குளதுரிய இத்திட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்கு உதவியாக இருக்கும் கையடக்க ஸ்மார்ட் போன் தொலைபேசியை எவ்வாறு செயற்படுத்துவது தொடர்பாக விளக்கினார்.

இதனையடுத்து முதல்வர் அஹமத் சக்கி வைபவ ரீதியாக திட்டத்தை கணணி மூலம் ஆரம்பித்துவைத்தார்.

(அட்டளைச்சேனை குறூப் நிருபர்)


Add new comment

Or log in with...