நிரந்தர சமாதானத்தை ஏற்படுத்த அரசுடன் சேர்ந்து பயணிக்க தயார்

தமிழ் மக்கள் கௌரவமாக வாழ தீர்வு அவசியம்

நாட்டில் நிரந்தர சமாதானத்தை ஏற்படுத்த அரசாங்கத்துடன் சேர்ந்து பயணிக்க தயாரென தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்பந்தன் தெரிவித்துள்ளார். 

நடந்து முடிந்த 2020ஆம் ஆண்டு பொது தேர்தலில் 09 ஆசனங்களை தமிழ்த் தேசிய கூட்டமைப்பு பெற்று வெற்றி ஈட்டியதை தொடர்ந்து திருகோணமலை ஸ்ரீ பத்திரகாளி அம்பாள் தேவஸ்தானத்தில் இரா.சம்பந்தன் தலைமையில் விசேட பூசைகள் நடைபெற்றன. இதில் தமிழ் தேசிய கூட்டமைப்பு தலைவர் மற்றும் அதன் ஆதரவாளர்கள் கலந்து கொண்டனர். 

தொடர்ந்து ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த அவர், 

இம்முறை நடைபெற்ற தேர்தல் ஒரு ஜனநாயக தேர்தலாக நான் கருதவில்லை.மக்களுக்கு பணம் , நன்கொடை , மதுபானம் வழங்கி ஆளும் கட்சியினர் ஆசனங்களை பெற்றுக் கொண்டுள்ளனர். சிறிய சிறிய தமிழ் கட்சிகள் போட்டியிட்டு தமிழ் மக்களின் வாக்குகளை பிரித்துள்ளனர். இதனால் 20 ஆசனங்கள் எதிர்பார்க்கப்பட்டு 09 ஆசனம் பெற்று வெற்றியீட்டியுள்ளோம். இதற்காக உழைத்த அனைவருக்கும் நன்றி எனக் கூறினார். 

நாட்டில் நிரந்தர சமாதானத்தை ஏற்படுத்த நீதியும் மற்றும் கெளரவமான பிரஜையாக வாழ தீர்வு வழங்கப்பட வேண்டும் . அதில் நாம் உறுதியாக உள்ளோம். ஆனால் ஆட்சி அமைக்கும் அரசாங்கத்தின் நிலைபாட்டை கொண்டு எமது இலட்சியத்தை அடைவோமெனவும், இதற்கு இந்தியாவின் பங்களிப்பு தொடரும் என நான் நினைக்கின்றேன். அதற்கான கருமங்களை ஆக்கபூர்வமான விதத்தில் நாங்கள் முன்னெடுத்துச் செல்வோம் என்றும் தெரிவித்தார்.


Add new comment

Or log in with...