அண்மையில் வெலிக்கடை சிறைச்சாலையில் ஹெரோயின் கடத்தலுக்காக பயன்படுத்தப்பட்ட பூனை, காணாமல் போன நிலையில் மீட்கப்பட்டுள்ளது.
குறித்த பூனை காணாமல் போனதாக தெரிவிக்கப்பட்டுள்ள போதிலும், அப்பூனை வெலிக்கடை சிறைச்சாலை வளாகத்திற்குள் இருந்த நிலையில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக, சிறைச்சாலை திணைக்களத்தின் ஆணையாளர் (செயற்பாடு) சந்தன ஏக்கநாயக்க தெரிவித்தார்.
வெலிக்கடை மெகசின் சிறைச்சாலைக்கு முன்னால் கழுத்தில் சிறு பொதியொன்று கட்டப்பட்டிருந்த பூனையொன்றை அவதானித்த சிறைச்சாலை அதிகாரி ஒருவர், அதனை பரிசோதித்தபோது, மிக சூட்சுமமாக பொதி செய்யப்பட்ட சிறிய பொதியில் 1.7கிராம் ஹெரோயின், 2சிம் அட்டைகள் (SIM card) மற்றும் மெமரி அட்டை (Memory Card) ஆகியன காணப்பட்டன.
இதனைத் தொடர்ந்து மேலதிக விசாரணைகளுக்காக குறித்த பூனை, பொரளை பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்க நடவடிக்கை எடுக்கப்பட்ட நிலையில், பொலிஸாரின் வருகை தாமதமடைந்ததன் காரணமாக குறித்த பூனை அது வைக்கப்பட்டிருந்த அறையிலிருந்து தப்பிச்சென்றதாக, சிறைச்சாலை தகவலை மேற்கோள் காட்டி, உள்ளூர் ஊடகங்கள் செய்தி வெளியிட்டிருந்தன.
Add new comment