நாடு முழுவதிலும் பெப்ரல் அமைப்பு கண்காணிப்பு பணியில்

இம்முறை பொதுத் தேர்தலுக்காக பெப்ரல் அமைப்பைச் சேர்ந்த சுமார் 5,000 கண்காணிப்பாளர்கள் தேர்தல் கடமைகளில் ஈடுபடுத்தப்படுவார்கள் என, அவ்வமைப்பு தெரிவித்துள்ளது.

தேர்தல் தினத்தன்று உள்ளூர் கண்காணிப்பாளர்கள் 3,045 பேர், காலை 7.00 மணி முதல் மாலை 5.00 மணி வரை வாக்களிப்பு நிலையங்களில் கண்காணிப்பு நடவடிக்கைகளில் ஈடுபடுத்தப்படுவார்கள்.

அத்தோடு, வாக்களிப்பு நிலையங்களை அண்டிய நிலைமைகளை கண்காணிப்பதற்காக கண்காணிப்பு வாகனங்கள் ஈடுபடுத்தப்படும் எனவும், இதில் மேல் மாகாணத்தில் 45, மத்திய மாகாணத்தில் 35, தென் மாகாணத்தில் 31, வட மாகாணத்தில் 40, கிழக்கு மாகாணத்தில் 21, வடமேற்கு மாகாணத்தில் 27, வட மத்தியில் 18, ஊவா மாகாணத்தில் 19, சப்ரகமுவ மாகாணத்தில் 24என260 வாகனங்களில் 1,092 கண்காணிப்பாளர்கள் சேவையில் ஈடுபடுத்தப்படுவார்கள்.

இதேவேளை,  கடந்த தேர்தல் கால அனுபவம் மற்றும் இம்முறை தேர்தலுக்கு முன்னைய காலத்தை கவனத்திற்கொண்டு, தேசிய அளவில் 13 நடமாடும் கண்காணிப்பாளர்கள் குழுக்கள் ஓகஸ்ட் 03ஆம், 04ஆம் திகதிகளில் நாட்டில் தெரிவுசெய்யப்பட்ட மாவட்டங்களில்  கண்காணிப்பு நடவடிக்கைகளுக்காக நிறுத்தப்பட்டுள்ளதாக, பெப்ரல் தெரிவித்துள்ளது.

அத்துடன், வாக்குகள் எண்ணும் நிலையங்களில் வாக்கு பெட்டிகளை பொறுப்பேற்கும் நிலையங்களில் 25 பேரும், 160 தேர்தல் தொகுதிகளிலும் 160 பேரும், தேர்தல் முடிவுகளை அறிவிக்கும் நிலையத்தில் 25 பேரும் கடமைகளில் ஈடுபடுத்த திட்டமிடப்பட்டுள்ளதாக, அவ்வமைப்பு தெரிவித்துள்ளது.   


Add new comment

Or log in with...