20 இலட்சத்து 71 ஆயிரத்து 527 பேர் வடக்கு, கிழக்கில் வாக்களிக்கத்தகுதி

பாராளுமன்ற தேர்தலில் இம்முறை வடக்கு, கிழக்கில் 20 இலட்சத்து 71 ஆயிரத்து 527 பேர் வாக்களிக்கத் தகுதிபெற்றுள்ளனர். இதற்கமைய கிழக்கு மாகாணத்தில் 12 இலட்சத்து 12 ஆயிரத்து 655 பேரும், வடக்கு மாகாணத்தில் 8 இலட்சத்து 58 ஆயிரத்து 872 பேரும் வாக்களிக்கத்தகுதிபெற்றுள்ளனர்.

வடக்கு, கிழக்கில் 29 பாராளுமன்ற ஆசனங்களுக்காக 85 அரசியல் கட்சிகள் 112 சுயேச்சைக் குழுக்கள் சார்பாக 1,768 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர்.

வடக்கில் யாழ்ப்பாணம் மாவட்டத்தில் 07 ஆசனங்களுக்காக 19 அரசியல் கட்சிகள், 14 சுயேச்சைக் குழுக்கள் சார்பாக 330 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர்.

வன்னி மாவட்டத்தில் 06 ஆசனங்களுக்காக 17 அரசியல் கட்சிகள், 28 சுயேச்சைக் குழுக்களின் சார்பாக 304 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர்.

கிழக்கில் 16 பாராளுமன்ற பிரதிநிதிகளை தெரிவு செய்வதற்காக 1033 வேட்பாளர்கள் தேர்தல் களத்தில் குதித்துள்ளனர். இதில் 49 அரசியல் கட்சிகளும் 70 சுயோட்சைக் குழுக்களும் உள்ளடங்குகின்றன. இதற்கமைய மட்டக்களப்பு மாவட்டத்தில் 05 ஆசனங்களுக்காக 16 அரசியல் கட்சிகள், 22 சுயேச்சைக் குழுக்கள் சார்பாக 304 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர்.

இதேபோன்று திகாமடுல்ல மாவட்டத்தில் 07 ஆசனங்களுக்காக 20 அரசியல் கட்சிகள், 34 சுயேச்சைக் குழுக்களின் சார்பாக 540 பேர் போட்டியிடுகின்றனர்.

திருகோணமலை மாவட்டத்தில் 4 ஆசனங்களுக்காக 13 அரசியல் கட்சிகள், 14 சுயேச்சைக் குழுக்களின் சார்பாக 189 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர். இம்முறை கொரோனா வைரஸ் காரணமாக வாக்களிக்கச் செல்பவர்கள் சுகாதார நடைமுறைகளைப் பின்பற்றியே வாக்களிக்கவுள்ளனர். வாக்காளர்கள் வாக்களிப்பு நிலையங்களுக்கு சிறுவர்களை அழைத்து வருவதை தவிர்க்குமாறு கேட்டுள்ளனர்.

பாண்டிருப்பு தினகரன் நிருபர்


Add new comment

Or log in with...