வெளிநாடுகளில் சிக்கியிருந்த 373 பேர் நாடு திரும்பினர்

- ஐக்கிய அரபு இராச்சியத்திலிருந்து 332 பேர்
- பிரித்தானியாவிலிருந்து 41 பேர்
- வெளிநாட்டு கப்பல் பணியாளர்கள் 13 பேர்

கொரோனா வைரஸ் பரவல் காரணமாக, இலங்கைக்கு வர முடியாமல் வெளிநாடுகளில் சிக்கியிருந்த இலங்கையர்கள் 373 பேர் நாட்டை வந்தடைந்துள்ளனர்.

ஐக்கிய அரபு இராச்சியத்திற்கு தொழில் வாய்ப்புக்காக புறப்பட்டுச் சென்றிருந்த இலங்கையர்கள் 332 பேரும்,  பிரித்தானியாவிற்கு தொழில் வாய்ப்பு மற்றும் உயர் கல்வி நடவடிக்கைகளுக்காக புறப்பட்டுச் சென்றிருந்த 41 பேரும் இன்று (02) அதிகாலை கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தை வந்தடைந்துள்ளனர்.

இதேவேளை, கொழும்பு துறைமுகத்தில் நங்கூரமிடப்பட்டுள்ள வர்த்தக கப்பலில் பணியாற்றுவதற்காக,  வெளிநாட்டு கப்பல் பணியாளர்கள் 13 பேர் இன்று அதிகாலை நாட்டை வந்தடைந்துள்ளனர். கட்டாரின் டோஹா நகரிலிருந்து அவர்கள் இவ்வாறு வருகை தந்துள்ளனர்.

இவ்விமானப் பயணிகள் அனைவரும் விமான நிலையத்தை வந்தடைந்ததும், PCR பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டதை தொடர்ந்து, தனிமைப்படுத்தலுக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.


Add new comment

Or log in with...