பயோ-செக்யூர் வளையத்திற்குள் ஐபிஎல் வீரர்கள்: 2 வாரத்தில் 4 முறை கொரோனா பரிசோதனை

ஐக்கிய அரபு இராச்சியத்தில் விளையாட இருக்கும் ஐபிஎல் வீரர்களுக்கு இரண்டு வாரத்தில் நான்கு முறை கொரோனா பரிசோதனை நடத்தப்பட இருக்கிறது.

ஐபிஎல் 2020 தொடரில் ஆட உள்ள வீரர்கள் மற்றும் ஐபிஎல் அணிகளின் பணியாளர்களுக்கு கடும் கட்டுப்பாடுகளை விதிக்க உள்ளது பிசிசிஐ. இரண்டு வார காலத்தில் வீரர்களுக்கு நான்கு முறை கொரோனா வைரஸ் பரிசோதனை செய்யப்பட உள்ளது. அதேபோல, உயிர் பாதுகாப்பு சுழலுக்குள் வந்து விட்ட யாரும் மீண்டும் வெளியே சென்று விட்டு, உள்ளே வர முடியாது.

2020 ஐபிஎல் தொடர் கடந்த மார்ச் மாதம் துவங்க இருந்தது. கொரோனா வைரஸ் பாதிப்பின் காரணமாக கால வரையின்றி தள்ளி வைக்கப்பட்டது. பின்னர் டி20 உலகக்கோப்பை தள்ளி வைக்கப்பட்டதால் அதே தேதிகளில் ஐபிஎல் தொடரை நடத்த பிசிசிஐ களமிறங்கி உள்ளது.

இந்தியாவில் கொரோனா வைரஸ் பாதிப்பு உச்சகட்டமாக இருக்கும் நிலையில், வெளிநாட்டில்தான் ஐபிஎல் தொடரை நடத்த முடியும் என்ற நிலையில் இருந்தது பிசிசிஐ. ஐக்கிய அரபு இராச்சியத்தில் 2014 ஐபிஎல் தொடரின் சில போட்டிகள் நடைபெற்று இருந்ததால், அதே நாட்டில் 2020 ஐபிஎல் தொடரையும் நடத்த முடிவு செய்துள்ளது.

2020 ஐபிஎல் கொரோனா வைரஸ் பாதிப்புக்கு மத்தியில் நடைபெற உள்ளதால், கடும் கட்டுப்பாடுகளுடன் நடைபெற உள்ளது. மத்திய அரசின் அனுமதி பெற பிசிசிஐ முயற்சித்து வருகிறது, மறுபுறம் ஐக்கிய அரபு இராச்சியம் ஐபிஎல் தொடரை நடத்த தேவையான ஏற்பாடுகளை செய்யத் துவங்கி உள்ளது.

பயோ பபுள் எனும் உயிர் பாதுகாப்பு சுழல் ஏற்படுத்தப்படும். ஐபிஎல் தொடரில் பங்கேற்கும் வீரர்கள், பணியாற்ற உள்ள ஊழியர்கள், அவர்கள் தங்கும் ஹோட்டல் ஊழியர்கள் முதல் பஸ் சாரதி வரை அனைவரும் அதை விட்டு விலகக்கூடாது. ஒருவேளை யாரேனும் உயிர் பாதுகாப்பு சுழலை விட்டு விலகினால் அவர்களை மீண்டும் ஐபிஎல் தொடருக்குள் அனுமதிக்க முடியாது எனவும் பிசிசிஐ முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது. இது வீரர்களுடன் பயணிக்கும் மனைவி, காதலி அல்லது குடும்பத்தினருக்கும் பொருந்தும்.


Add new comment

Or log in with...