போரின் போது புதைக்கப்பட்ட 10 கிலோகிராம் நிறை கொண்ட கிளேமோர் குண்டு உள்ளிட்ட பெருமளவான வெடிபொருட்கள் மீட்கப்பட்டுள்ளன.
இன்று (27) முல்லைத்தீவு, புதுக்குடியிருப்பு, ஆனந்தபுரம், பச்சைப்புல்மோட்டை பகுதியில், இவ்வெடிபொருட்கள் மீட்கப்பட்டுள்ளன.
நேற்றையதினம் (26) ஆனந்தபுரம் கிராமத்தில் தனியார் ஒருவரின் காணியினை துப்பரவு செய்யும் போது நிலத்தில் புதைந்து காணப்பட்ட சந்தேகத்திற்கிடமான பொருள் தொடர்பில் புதுக்குடியிருப்பு பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.
இதற்கமைய நீதிமன்ற உத்தரவு பெறப்பட்டு குறித்த பகுதி வெடிபொருட்கள் அகற்றும் சிறப்பு அதிரடிப்படையினரால் இன்று (27) காலை தோண்டப்பட்டுள்ளது.
இதன்போது பாதுகாப்பாக பொதி செய்யப்பட்டு நிலத்திற்குள் புதைக்கப்பட்ட நிலையிலிருந்த, 10 கிலோ நிறையுடைய கிளேமோர் குண்டு ஒன்று, 109 மிதிவெடிகள், வெடிமருந்து 1.5 கிலோகிராம் உள்ளிட்ட வெடிபொருளுக்கு பயன்படுத்தப்படும் பொருட்கள் என்பன மீட்கப்பட்டுள்ளன.
நீதிமன்ற உத்தரவிற்கு அமைய, மீட்கப்பட்ட பொருட்கள் அனைத்தையும் அழிப்பதற்காக, விசேட அதிரடிப்படையினர் கொண்டு சென்றுள்ளார்கள்.
(புதுக்குடியிருப்பு தினகரன் நிருபர் - ச. இராசரத்தினம்)
Add new comment