வெளிநாட்டு பணியாளர்களை குறி வைத்து கடன் திட்ட மோசடி; ஐவர் கைது

- பெண்ணொருவரிடமிருந்து ரூ. 5 இலட்சம் அபகரிப்பு

இணையவழி ஊடான கடன் திட்டத்தின் மூலம் வெளிநாட்டு தொழிலாளர்களுக்கு சலுகை வட்டி வீதத்தில் கடன் வழங்கப்படும் என்று கூறி பண மோசடியில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் 05 பேர், கிருலப்பனை பொலிஸ் நிலைய அதிகாரிகளினால் கைது  செய்யப்பட்டுள்ளனர்.

இணையவழி ஊடான கடன் திட்டத்தின் மூலம் வெளிநாட்டு தொழிலாளர்களுக்கு சலுகை வட்டி வீதத்தில் கடன் வழங்கப்படும் என்று அவர்களின் தொலைபேசி இலக்கங்களுக்கு அழைப்பை ஏற்படுத்தி, இந்நாட்டிலுள்ள அவர்களுடைய வங்கிக் கணக்குகளை பெற்று, அதில் ஒருவரின் வங்கிக் கணக்கிலிருந்து 500,000 ரூபாவை மோசடியாக பெற்றுள்ளதாக, பெண் ஒருவர், கிருலப்பனை பொலிஸ் நிலையத்தில் செய்த முறைப்பாட்டின் அடிப்படையில் இச்சந்தேகநபர்கள் பிட்டபெத்தர, நாரஹேன்பிட்டி, வெல்லம்பிட்டி ஆகிய பகுதிகளில் நேற்று (26) கைது செய்யப்பட்டுள்ளதாகவும், பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

அதேயிடங்களைச் சேர்ந்த 30, 39, 38, 46 வயதுடைய சந்தேகநபர்களே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர்.

இச்சந்தேகநபர்களிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணையின் அடிப்படையில் அவர்கள் போலி ஆவணங்கள் மற்றும் போலி சாரதி அனுமதிப்பத்திரங்கள் தயாரித்துள்ளமை தெரியவந்துள்ளது.

போலி சாரதி அனுமதிப்பத்திரங்களை தயாரிப்பதற்காக பயன்படுத்தப்படும் மடிக்கணினி, வங்கி அட்டைகள், சாரதி அனுமதிப்பத்திரங்களை அச்சிடுவதற்காக பயன்படுத்தப்படும் லெமினெட்டிங் இயந்திரம், சாரதி அனுமதிப்பத்திரங்களை அச்சிடுவதற்காக பயன்படுத்தப்படும் 925 அட்டைகள், 02 போலி இறப்பர் முத்திரைகள், போலியாக தயாரிக்கப்பட்ட 61 சாரதி அனுமதிப்பத்திரங்கள், 05 சர்வதேச சாரதி அனுமதிப்பத்திரங்கள் ஆகியவை இச்சந்தேகநபர்களிடமிருந்து கைப்பற்றப்பட்டுள்ளதாக, பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

அத்தோடு, இச்சந்தேகநபர்கள் பயன்படுத்திய கார் ஒன்றும் வேன் ஒன்றும் கைப்பற்றப்பட்டுள்ளதாக, பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

கைது செய்யப்பட்டுள்ள இச்சந்தேகநபர்களை இன்று (27) புதுக்கடை நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்துவதற்கான நடவடிக்கைகளை பொலிஸார் எடுத்துள்ளனர்.

இச்சந்தேகநபர்களிடம் விரிவான விசாரணைகளை கிருலப்பனை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.


Add new comment

Or log in with...