உலக சுகாதார அமைப்பின் தலைவர் கவலை
உலகளவில் கொரோனா வைரஸ் பாதிப்புகள் மிக மிக மோசமான நிலையை எட்ட வாய்ப்பு இருப்பதாக உலக சுகாதார அமைப்பின் தலைவர் டெட்ரோஸ் அதானோம் கவலை தெரிவித்துள்ளார்.
ஜெனீவாவில் பேசிய அவர், கொரோனாவை கட்டுப்படுத்தும் முயற்சியில் பல நாடுகள் தவறான திசையில் பயணித்து கொண்டுள்ளதாக எச்சரித்தார். உலக மக்களின் முதல் எதிரியாக கொரோனா வைரஸ் உருவெடுத்திருப்பதாகவும் அவர் குறிப்பிட்டார். நாடுகள் விரிவான யுக்திகளை கையாளாவிட்டால், இன்னும் சில காலத்திற்கு இயல்பு நிலை திரும்பப் போவதில்லை என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
அமெரிக்காவில் அதிக அளவு தொற்றுகள் பதிவாவதையும் அவர் சுட்டிக் காட்டி இருக்கிறார். மேலும் அவர் கூறுகையில், 'சுகாதாரம் சார்ந்த முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை கடைபிடிக்க தவறினால் கொரோனா பெருந்தொற்று மிக மோசமான உச்சகட்ட அழிவை ஏற்படுத்தும். பரவுதல் மற்றும் உயிர்களைக் காப்பாற்றுவதை மையமாகக் கொண்ட ஒரு விரிவான திட்டத்தை அரசாங்கங்கள் வகுக்க வேண்டும். மக்கள் சமூக இடைவெளி , கை கழுவுதல், முகக்கவசம் அணிவது, இருமல் மற்றும் தனிமைபடுத்துதல் போன்ற அடிப்படை பொது சுகாதாரக் கொள்கைகளைப் பின்பற்றவில்லை என்றால் இந்த நோய் நம்மை மோசமான நிலைக்கு இழுத்து செல்லுமென தெரிவித்துள்ளார். இதற்கிடையில் கொரோனா வைரஸின் பரவல் தொடக்கம் குறித்து ஆராய சீன சென்றிருக்கும் தங்களது குழு, பணியை தொடங்கும் முன்பு தங்களை தனிமைப்படுத்திக் கொண்டுள்ளதாக உலக சுகாதார நிறுவன அதிகாரி மைக் ரியான் தெரிவித்துள்ளார்.
Add new comment