ஹக்மன பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கொங்கல வீதிச் சோதனைச்சாவடி கடமையில் ஈடுபட்ட பொலிஸார் மீது டிப்பர் வாகனத்தினால் வேண்டுமென்று மோதி விட்டு தப்பிச் சென்ற நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.
நேற்று (13) இரவு 11.00 மணியளவில் இடம்பெற்ற இச்சம்பவத்தில், பொலிஸ் கான்ஸ்டபிள் ஒருவர் உயிரிழந்ததோடு, மேலும் இரு பொலிஸ் சார்ஜென்ட்கள் படு காயமடைந்து மாத்தறை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
குறித்த நபர், இன்று (14) பிற்பகல் 2.30 மணியளவில் ஹுங்கம பொலிஸ் பிரிவிற்குட்பட்ட, ரனால பிரதேசத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார்.
குறித்த நபர் செலுத்திய டிப்பர் வாகனம், ரன்ன பிரதேசத்தில் கைவிட்டுச் சென்ற நிலையில் பொலிஸாரினால் மீட்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
கைதான சந்தேகநபர் 34 வயதான, அம்பலாந்தோட்டை, லுனம, உஹபிட்டகொட பிரதேசத்தைச் சேர்ந்தவர் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.
சந்தேகநபரை நாளையதினம் (15) மாத்தறை நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதோடு, ஹக்மன பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.
Add new comment