திருகோணமலை விபத்தில் 4 பிள்ளைகளின் தந்தை மரணம்

திருகோணமலை விபத்தில் 4 பிள்ளைகளின் தந்தை மரணம்-Accident-48-Yr Old A Father of 4 Children Killed

குச்சவெளி பிரதேசசபைத் தேர்தலில் போட்டியிட்ட மு.கா. வேட்பாளர்

திருகோணமலை, நிலாவெளி பிரதான வீதி ஆறாம் கட்டை பகுதியில் இடம்பெற்ற விபத்தில் நான்கு பிள்ளைகளின் தந்தையொருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இன்று (13)  மாலை, திருகோணமலையிலிருந்து நிலாவெளி பகுதிக்கு சென்று கொண்டிருந்த லொறியொன்று முச்சக்கரவண்டியுடன் மோதுண்டதை அடுத்து, குறித்த முச்சக்கர வண்டி  மோட்டார் சைக்கிளுடன் மோதியதில் இவ்விபத்து ஏற்பட்டுள்ளதாக தெரியவருகின்றது.

மோட்டார் சைக்கிளில் சென்ற நபரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

நிலாவெளி, 07ஆம் கட்டை பகுதியைச் சேர்ந்த, 48 வயதான நான்கு பிள்ளைகளின் தந்தையான ரவூப் என்றழைக்கப்படும் மொஹிதீன் தௌபீக் என்பவரே உயிரிழந்துள்ளதாகவும் தெரியவருகின்றது. குறித்த நபர் கடந்த உள்ளூராட்சி சபைத் தேர்தலில்  குச்சவெளி பிரதேசசபைக்காக, ஶ்ரீ.ல.மு.காங்கிரஸ் சார்பில் போட்டியிட்ட வேட்பாளராவார்.

குறித்த விபத்துடன் தொடர்புடைய லொறியின் சாரதியை கைது செய்துள்ளதாகவும் விபத்து தொடர்பில் விசாரணைகளை நிலாவெளி பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

இதேவேளை உயிரிழந்தவரின் சடலம் தற்போது திருகோணமலை பொது வைத்தியசாலை பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளதுடன் பிரேத பரிசோதனையின் பின்னர் உறவினர்களிடம் ஒப்படைக்க உள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.

(ரொட்டவெவ குறூப் நிருபர் - அப்துல்சலாம் யாசீம்)


Add new comment

Or log in with...