பஸ்களில் பொருட்கள் விற்பனையை தடை செய்ய ஆலோசனை

கொவிட்-19 தொற்றுநோயைத் தொடர்ந்து, அனைத்து தனியார் மற்றும் இ.போ.ச. பஸ் வண்டிகளில் இடம்பெறும் பல்வேறு வகையான விற்பனை நடவடிக்கைகளை உடனடியாக இடைநிறுத்துவதற்கு நடவடிக்கை எடுக்குமாறு ஆலோசனை வழங்கப்பட்டுள்ளது.

தேசிய போக்குவரத்து ஆணைக்குழு மற்றும் இலங்கை போக்குவரத்து சபைக்கு, போக்குவரத்து முகாமைத்துவ அமைச்சர் மஹிந்த அமரவீர குறித்த ஆலோசனையை வழங்கியுள்ளார்.

சில நடமாடும் விற்பனையாளர்கள், சுகாதார நடைமுறைகளை பின்பற்றாமல் செயற்படுவதாக, போக்குவரத்து முகாமைத்துவ அமைச்சிடம், பொதுமக்கள் முறைப்பாடு செய்திருந்தனர்.

இதேவேளை, கடந்த மார்ச் மாதம் முதல் புகையிரதங்களில் நடமாடும் விற்பனையாளர்கள் நுழைவதற்கு இலங்கை புகையிரத திணைக்களம் தடை விதித்திருந்தது.

இவ்வாறான விற்பனையாளர்களினால் கொவிட்-19 தொற்றுநோய் பரவக்கூடிய சாத்தியம் இருப்பதால், இம்முடிவு எடுக்கப்பட்டுள்ளது. 


Add new comment

Or log in with...