பேராசிரியர்களுடன் பேச்சு நடக்கிறது என்கிறார் - டக்ளஸ்
கிழக்கு மாகாண தொல்பொருட்களை பாதுகாப்பதற்கான ஜனாதிபதியால் நியமிக்கப்பட்டுள்ள செயலணியில் சிறுபான்மையின துறைசார் நிபுணத்துவ பிரதிநிதிகளை முன்மொழிவதற்கான முயற்சிகளை கைவிடவில்லை என்று அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்தார். பொருத்தமான இருவரை பரிந்துரைப்பதற்காக வடக்கு கிழக்கில் உள்ள பேராசிரியர்களுடன் பேச்சுவார்த்தைகளை நடத்தி வருவதாகவும் அவர் குறிப்பிட்டார்.
அடுத்த அமைச்சரவைக் கூட்டத்திற்கு செயலணி அங்கத்துவத்திற்காக பரிந்துரைப்பதற்கு இரு பிரதிநிதிகளின் பெயர்களுடனே செல்வதற்கு எதிர்பார்த்திருப்பதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.
முன்னதாக கிழக்கு மாகாண தொல்பொருட்களை பாதுகாப்பதற்காக பாதுகாப்புச் செயலாளர் தலைமையில் அமைக்கப்பட்ட ஜனாதிபதி செயலணியில் 11 உறுப்பினர்கள் காணப்பட்ட போதும் அதில் சிறுபான்மை மக்களை பிரதிநிதித்துவப்படுத்தும் ஒருவர் கூட இணைத்துக் கொள்ளப்பட்டிருக்கவில்லை.
அதனையடுத்து அமைச்சர் டக்ளஸ், ஜனாதிபதிக்கு கடிதம் மூலமும் அமைச்சரவையிலும் இந்த விடயத்தினை கவனத்திற்கு கொண்டு வந்திருந்தபோதும் இரண்டாவதாக வெளியிட்ட வர்த்தமானியில் சிவில் பாதுகாப்பு பணியகத்தின் பணிப்பாளர் ரியர் அட்மிரல் ஆன்ந்த பீரிஸ் இணைத்துக் கொள்ளப்பட்டிருப்பதாக அறிவிக்கப்பட்டிருந்ததோடு சிறுபான்மை தமிழ் பேசும் பிரதிநிதிகளை முன்மொழியவில்லை என்றும் ஜனாதிபதி கூறியிருந்தமை குறிப்பிடத்தக்கது.
Add new comment