கொரோனாவுக்கு மத்தியில் சிங்கப்பூரில் பொதுத் தேர்தல்

கொரோனா வைரஸ் தொற்று மற்றும் பொருளாதார வீழ்ச்சிக்கு மத்தியில் சிங்கப்பூரில் பொதுத் தேர்தலில் நேற்று மக்கள் வாக்களித்தனர்.

சிறிய நகர் அளவான சிங்கப்பூர் கொரோனாவுக்கு மத்தியில் தேர்தலை நடத்தும் ஒருசில நாடுகளில் ஒன்றாக உள்ளது. எனினும் வாக்காளர்கள் முகக்கவசம் மற்றும் கையுறை அணிவது கட்டாயமாக்கப்பட்டு நேரத்திற்கு வாக்களிப்பதற்கான இடங்கள் அளிக்கப்பட்டு கடும் கட்டுப்பாடுகளுடனேயே வாக்களிப்பு இடம்பெற்றது.

ஆசிய பசிபிக் பிராந்தியத்தில் கொரோனா வைரஸ் தொற்றினால் மோசமாக பாதிக்கப்பட்ட நாடுகளில் ஒன்றாக இருக்கும் சிங்கப்பூரில் 45,000க்கும் அதிகமான சம்பவங்கள் பதிவாகின.

பெருந் தொற்றுக்கு மத்தியில் கூட்டங்கள் கூடுவது மற்றும் நிகழ்ச்சிகள் நடத்துவது ஆபத்தாக இருக்கும் சூழலில் கடந்த சில மாதங்களில் ஒருசில நாடுகளே தேசிய தேர்தல்களை நடத்தியுள்ளன.

கடந்த ஏப்ரலில் தென் கொரியாவிலும் ஜூன் இறுதியில் செர்பியாவிலும் தேர்தல் இடம்பெற்றன. இரு தேர்தல்களிலும் ஆளும் கட்சியே வெற்றியீட்டின.

சிங்கப்பூரில் சுதந்திரத்திற்கு பின்னர் தொடக்கம் மக்கள் செயற்பாட்டுக் கட்சியே ஆட்சியில் இருக்கும் நிலையில் இந்தத் தேர்தலிலும் அந்தக் கட்சி ஆட்சியை தக்கவைத்துக் கொள்ளும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

எனவே தற்போதைய பிரதமர் லீ ஷசின் லூங் மற்றொரு தவணைக்கு தமது பதவியை தக்கவைத்துக் கொள்ள வாய்ப்பு உள்ளது.


Add new comment

Or log in with...