கடந்த 24 மணித்தியாலத்தில் 1,974 பேர் கைது

கடந்த 09ஆம் திகதி நள்ளிரவு 12.00 மணி முதல், நேற்று (10) நள்ளிரவு 12.00 மணி வரையான 24 மணித்தியால காலப்பகுதியில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின்போது பல்வேறு குற்றச்சாட்டுகளின் அடிப்படையில் 1,974 பேர் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

போதைப்பொருள், ஆயுதங்கள், சட்டவிரோத மதுபானம் வைத்திருந்த குற்றச்சாட்டுகளின் அடிப்படையில் இச்சந்தேகநபர்கள் கைதுசெய்யப்பட்டுள்ளதாக, பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

இவர்களில் பிடிவிறாந்து பிறப்பிக்கப்பட்ட 613 பேரும், ஏனைய குற்றங்களை இழைத்த குற்றச்சாட்டில் 674 பேரும் கைது செய்யப்பட்டுள்ளதாகவும், பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

ஹெரோயின் வைத்திருந்த குற்றச்சாட்டில் 222 பேரும், கஞ்சா வைத்திருந்த குற்றச்சாட்டில் 139 பேரும், ஐஸ் போதைப்பொருள் வைத்திருந்த குற்றச்சாட்டில் 11 பேரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.

ஆயுதங்கள் வைத்திருந்த குற்றச்சாட்டில் 05 பேரும், சட்டவிரோத மதுபானம் வைத்திருந்த குற்றச்சாட்டில் 310 பேரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இச்சுற்றிவளைப்புகளின்போது கைத்துப்பாக்கி 01 உம், துப்பாக்கிகள் 02 உம், ரிபிட்டர் வகை துப்பாக்கிகள் 03 உம், 12 துளை கொண்ட துப்பாக்கி 01 உம், வாள் 01 உம், தோட்டாக்கள் 37 உம் கைப்பற்றப்பட்டுள்ளன.

அத்தோடு, இந்நடவடிக்கைகளின்போது 3,676 லீற்றர் சட்டவிரோத மதுபானமும் கைப்பற்றப்பட்டுள்ளதாக, பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.


Add new comment

Or log in with...