யாழ். மாவட்டச் செயலகத்துக்கு முன்பாக வாள்வெட்டு; ஒருவர் காயம்

- CCTV இன் உதவியுடன் விசாரணை

பலத்த பாதுகாப்புக்கு மத்தியில் உள்ள யாழ். தேர்தல் தெரிவத்தாட்சி அலுவலகம் (மாவட்ட செயலகம்) முன்பாக இனந்தெரியாத நபர்களினால்,  ஒருவர் மீது வாள்வெட்டு மேற்கொள்ளப்பட்டுள்ளது.  

யாழ். மாவட்டச் செயலகத்தின் சுற்றுச்சூழல் அதிகார சபை பிரிவில் கடமையாற்றும்  மல்லாகத்தை சேர்ந்த பொன்னம்பலம் பிரகாஸ் எனும் உத்தியோகத்தர் மீது வாள்வெட்டு மேற்கொள்ளப்பட்டுள்ளதோடு,  அவரது மோட்டார் சைக்கிளும் சேதமாக்கப்பட்டுள்ளது. 

குறித்த உத்தியோகஸ்தர் வழமை போன்று இன்று (08) காலை கடமைக்காக வந்தபோது, அவரை பின்தொடர்ந்து இரண்டு மோட்டார் சைக்கிள்களில் வந்த நால்வர், மாவட்டச் செயலக வாயிலுக்கு அருகில் வழிமறித்து அவர் மீது வாள்வெட்டு தாக்குதலை மேற்கொண்டுள்ளனர். 

இதன்போது, கையில் வாள்வெட்டுக் காயத்திற்கு இலக்கான உத்தியோகஸ்தர் பாதுகாப்பு தேடி மாவட்டச் செயலகத்தினுள் ஓடியுள்ளார். அப்போதும், இருவர் அவரை பின் தொடர்ந்து மாவட்டச் செயலக வளாகத்தினுள் புகுந்தும் தாக்குதலை மேற்கொண்டதோடு,  வெளியில் வந்து  அவரது மோட்டார் சைக்கிள் மீதும் தாக்குல் மேற்கொண்டு அதனை சேதமாக்கி விட்டு தப்பிச்சென்றுள்ளனர். 

தாக்குதலுக்கு இலக்கான உத்தியோகஸ்தர் யாழ். போதனா வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். 

நாடாளுமன்ற தேர்தலை முன்னிட்டு மாவட்ட செயலகத்தில், தெரிவத்தாட்சி அலுவலகமும் செயற்பட்டு வருகின்றது. வேட்புமனு தாக்கல் செய்யப்பட்ட நாளில் இருந்து மாவட்டச் செயலகம் தெரிவத்தாட்சி அலுவலகம் எனும் ரீதியில் பொலிஸ் பாதுகாப்பு வழங்கப்பட்டு, பாதுகாப்பு நடவடிக்கைகள் பலப்படுத்தப்பட்டு இருந்தது. 

இந்நிலையிலையே, பலத்த பாதுகாப்புக்கு மத்தியில் உள்ள மாவட்டச் செயலக வாயிலுக்கு அருகில் வன்முறைக் கும்பல் மோட்டார் சைக்கிளில் வந்து வாள்வெட்டு தாக்குதலை நடாத்தி விட்டு தப்பிச் சென்றுள்ளது. 

தற்போது யாழ்ப்பாண பொலிசார்,மாவட்டச் செயலக கண்காணிப்புக் கமெராக்களின் உதவியுடன் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர். 

(யாழ்.விசேட நிருபர்-மயூரப்பிரியன், யாழ்ப்பாணம் குறூப் நிருபர் - சுமித்தி தங்கராசா)

 


Add new comment

Or log in with...