தமிழ் தேசிய கூட்டமைப்பை உருவாக்கியது நானே

தமிழ் தேசிய கூட்டமைப்பை உருவாக்கியது நானே. ஆனால் சம்பந்தர் ஐயா 'அப்படியில்லை புலிகளால் உருவாக்கப்படவில்லை' என்று கூறுகிறார். உண்மையில் அக்கட்சி  உருவாக்கத்தின் போது  அருகில் நானிருந்தேன். இன்றும் உயிருடனும் இருக்கிறேன். இதனை எப்படி மறைப்பது என அம்பாறை மாவட்டத்தில் தமிழர் மகா சபை  சார்பில்  பாராளுமன்ற  வேட்பாளராக போட்டியிடும் தமிழர் ஐக்கிய சுதந்திர முன்னணியின் தலைவரும் முன்னாள் பிரதியமைச்சருமான கருணா அம்மான் என்று அழைக்கப்படும் விநாயகமூர்த்தி முரளிதரன் தெரிவித்தார்.

அம்பாறை மாவட்டத்தில் கல்முனை வலய தமிழர் இளைஞர் ஒன்றியத் தலைவர் நிமலன் தலைமையில் நேற்று முன்தினம் இரவு இடம்பெற்ற பிரசார கூட்டத்தில் உரையாற்றும் போதே மேற்கண்டவாறு தெரிவித்தார்.

மேலும் உரையில் அவர் கூறியதாவது,

இன்னும் 15 ஆண்டுகளுக்கு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச தலைமையிலான அரசாங்கமே தொடரும். அந்த ஆட்சியில் பங்காளிக்கட்சியாக இருந்து மக்களுக்கான சேவைகளை நாம் முன்னெடுப்போம்.அம்பாறை மாவட்ட தமிழ் மக்களின் இருப்பைப் பாதுகாத்து பொருளாதாரத்தை வளமாக்குவதே எனது இலட்சியம் என நினைத்து தான் அம்பாறைக்கு வந்துள்ளேன். ஆனால் எனது வருகையை அடுத்து இங்குள்ள முஸ்லிம் அரசியல்வாதிகளுக்கு புளிக்கரைக்குது. கூடவே தமிழ் தேசியக் கூட்டமைப்பினரும் பயம்வந்து விட்டனர்.

கடந்த நான்கரை வருடகாலம் எமது மக்களை சீரழித்து விட்டார்கள். கொந்தராத்து, மரவியாபாரம், மண்வியாபாரம் இதுதான் அவர்கள் செய்த சேவைகள், சாதனைகள்.வாக்களித்த மக்களை நடுத்தெருவில் விட்டுவிட்டு இன்று மீண்டும் வாக்குகேட்டு வருகிறார்கள்.எனவே எமது சின்னம் கப்பல்.

அது வெறும் கப்பல் அல்ல. தத்தளிக்கும் மக்களை காப்பாற்றி கரை சேர்க்கும் கப்பல். எனவே தத்தளிக்கின்ற அம்பாறை தமிழ் மக்களை காப்பாற்றி கரைசேர்க்கின்ற அக்கப்பலுக்கு வாக்களித்து வாழ்வை வளப்படுத்துவதோடு இருப்பையும் காப்பாற்றிக் கொள்ளவேண்டும் என்றார்.

பாறுக் ஷிஹான்


Add new comment

Or log in with...