சீனாவில் கொரோனாவை விட ஆபத்தான 'பிளேக்' தொற்று முன்னெச்சரிக்கை தீவிரம்

சீன மருத்துவமனை ஒன்றில் இருந்த புபோனிக் பிளேக் நோய்ப் பரவல் குறித்த எச்சரிக்ைக விடுக்கப்பட்டுள்ளது.

மங்கோலிய சுயாட்சி பகுதியில் உள்ள பயனூர் மருத்துவமனையில் மூன்றாம் நிலை தொற்றுப் பரவல் குறித்த எச்சரிக்கை விடுத்துள்ளதாக அரசு நாளிதழில் தகவல் வெளியாகியுள்ளது. இந்த ஆண்டு இறுதி வரை இந்த எச்சரிக்கை தொடரும் என்றும் மருத்துவமனை தெரிவித்துள்ளது.

தற்போதைய நிலவரப்படி மனிதர்களிடம் வேகமாகப் பரவக்கூடிய பிளேக் பெருந்தொற்று காரணமாக இரண்டு பேர் பாதிக்கப்பட்டுள்ளனர் என்றும் பொதுமக்கள் தங்களை சுயமாக பாதுகாத்துக் கொள்ள விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மலை எலி, அணில் வகையைச் சேர்ந்த மர்மூத் என்ற விலங்குகளின் மீது ஈக்கள் மூலமாக இத்தொற்றுப் பரவுகிறது.

மர்மோத் இறைச்சியை உண்டதால் இந்நோய்த் தொற்று பரவியதாகவும், யாரும் இனி எலி, அணில், மர்மோத் போன்ற விலங்குகளின் இறைச்சியை உண்ண வேண்டாம் என்றும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இந்நோய்த் தொற்று 24 மணி நேரத்தில் ஆளைக் கொல்லக்கூடியது என்று உலக சுகாதார அமைப்பு எச்சரிக்கை விடுத்துள்ளது. 

கடந்த வருடம் இந்த பிளேக் காரணமாக மங்கோலியாவில் இரண்டு பேர் பலியானார்கள்.

பிளேக் என்பது உலகை தாக்கிய கொடுமையான நோய்களில் ஒன்றாகும். பல்வேறு வகையான பிளேக் இதுவரை மூன்று முறை அடுத்தடுத்து உலகை தாக்கி உள்ளமை குறிப்பிடத்தக்கது.

எனினும் புபோனிக் பிளேக் நோய்ப் பரவல் அவ்வப்போது உலகில் தோன்றி மறைந்து வருகின்றன. 2017 ஆம் ஆண்டு மடகஸ்காரில் இது பரவியபோது 300 க்கும் அதிகமான சம்பவங்கள் பதிவாகின.

மத்திய காலத்தில் பிளேக் நோயினால் ஐரோப்பாவில் 50 மில்லியன் பேர் வரை உயிரிழந்ததாகக் கணிக்கப்படுகிறது.


Add new comment

Or log in with...