அதிபர், ஆசிரியர்களுக்கு கல்வி அமைச்சு அறிவுரை

மூன்று மாதங்களுக்கு பின்னர் பாடசாலைகள் இன்று ஆரம்பம் 

கொரோனா வைரஸ் தொற்றால் கடந்த மூன்று மாதங்களாக மூடப்பட்டிருந்த பாடசாலைகளின் கல்வி நடவடிக்கைகள் இன்று ஆரம்பமாவதாக கல்வி அமைச்சு அறிவித்துள்ளது.  

நான்கு கட்டங்களாக  பாடசாலைகளை மீண்டும் திறப்பதற்கு எடுக்கப்பட்ட தீர்மானத்திற்கு அமைய இரண்டாம் கட்டமாக அனைத்து பாடசாலைகளும் கல்வி நடவடிக்கைகளுக்காக இன்று திறக்கப்படவுள்ளன.  

அதனடிப்படையில் தரம் 05, 11 மற்றும் தரம் 13 மாணவர்களுக்கான கல்வி நடவடிக்கைகள் இன்று ஆரம்பமாகவுள்ளன.  ஆசிரியர்களும் பாடசாலைகளுக்கு சமுகமளிக்க வேண்டும் எனவும் கற்பித்தலுக்கு முன்னுரிமை வழங்க வேண்டும் எனவும் கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.  

தரம் 5 முதல் தரம் 11 வரையான மாணவர்களுக்கு காலை 7.30 மணி முதல் 1.30 மணி வரை கல்வி நடவடிக்கைகள் நடைபெறவுள்ளதுடன், தரம் 13 மாணவர்களுக்காக காலை 7.30 மணி முதல் பிற்பகல் 3.30 மணி வரை கல்வி நடவடிக்கைகள் இடம்பெறும் என கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.   பாடசாலைகள் ஆரம்பிக்கப்பட்டதன் பின்னர் சகல ஆசிரியர்களுக்கும் காலை 7.30 மணிக்கு பாடசாலைக்கு சமுகமளிக்க வேண்டிய அவசியம் இல்லை என கல்வி அமைச்சு குறிப்பிட்டுள்ளது.  

அவர்கள் கற்பிக்கும் பாடநெறி ஆரம்பமாவதற்கு 30 நிமிடங்களுக்கு முன்னர் பாடசாலைகளுக்கு சமுகமளித்தல் போதுமானது எனவும் கல்வி அமைச்சின் செயலாளர் என்.எம்.எம் சித்ராநந்த தெரிவித்துள்ளார்.  

அதேநேரம் அனைத்து ஆசிரியர்களும் பிற்பகல் 3.30 மணி வரை பாடசாலைகளில் கடமைகளின் இருக்கவேண்டிய தேவை இல்லை எனவும் அமைச்சின் செயலாளர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.   


Add new comment

Or log in with...