கொவிட்-19 தொற்று; மேலும் 4 கடற்படையினர் குணமடைவு

கொவிட்-19 தொற்றினால் பீடிக்கப்பட்டு வைத்தியசாலைகளில் சிகிச்சை பெற்று வந்த மேலும் 04 கடற்படையினர் பூரண குணமடைந்து, வைத்தியசாலைகளிலிருந்து வெளியேறியுள்ளனர்.

இக்கடற்படையினர் அனைவரும் வெலிக்கந்த வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்தனர். அவ்வைத்தியசாலையில் அவர்கள் சிகிச்சை பெற்றுக்கொண்டிருந்த வேளையில் அவ்வப்போது PCR பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. அதன் முடிவுகளுக்கு அமைய, குறித்த வைரஸ் தொற்று அவர்களது உடலில் மேலும் இல்லை என்று உறுதிப்படுத்தப்பட்டது. இதனைத் தொடர்ந்து கடந்த 02ஆம் திகதி 03 கடற்படையினரும், நேற்று (04) ஒரு கடற்படையினரும் வைத்தியசாலையிலிருந்து வெளியேறியுள்ளதாக, கடற்படை ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.  

இதற்கமைய, கொவிட்-19 தொற்றினால் பீடிக்கப்பட்டு குணமடைந்த கடற்படையினரின் எண்ணிக்கை 883ஆக உயர்வடைந்துள்ளதாகவும், கடற்படை ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

இவ்வாறு வைத்தியசாலைகளிலிருந்து அவர்கள் வெளியேறியுள்ள போதிலும், சுகாதார ஆலோசனைகளுக்கு அமைய, மேலும் 14 நாட்களுக்கு அவர்களை தனிமைப்படுத்த கடற்படையினரால் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

இதேவேளை நேற்று முன்தினம் 02 பேர் குணமடைந்துள்ளதாக ஏற்கனவே கடற்படை ஊடகப் பிரிவு அறிவித்திருந்தது. அதற்கமைய நேற்றுமுன்தினம் 05 பேரும், நேற்று ஒருவரும் குணமடைந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது


Add new comment

Or log in with...