- பலி எண்ணிக்கை மேலும் அதிகரிக்க வாய்ப்பு
மியன்மாரின் வடக்கு பகுதியில் உள்ள மரகத மாணிக்கக்கல் அகழ்வு சுரங்கப் பகுதியில் ஏற்பட்ட நிலச்சரிவில் 113 பேர் பலியாகியுள்ளனர்.
குறித்த அசம்பாவிதம் இன்று (02) கச்சின் மாநிலத்தின் ஹபகாந் (Hpakant) பகுதியிலுள்ள உள்ள ( jade-rich) சுரங்கத்தில் ஏற்பட்டுள்ளது.
அங்கு பெய்த பாரிய மழையை அடுத்து, இச்சம்பவம் இடம்பெற்றுள்ளதாக, மியன்மார் தீயணைப்புப் பிரிவு தனது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கத்தில் தெரிவித்துள்ளது.
திடிரேன ஏற்பட்டு சகதியுடனான அலையில் சிக்குண்ட தொழிலாளர்கள் அதில் சிக்குண்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் தற்போது வரை 113 பேரின் சடலங்கள் மீட்கப்பட்டுள்ளதாகவும், இவ்வெண்ணிக்கை மேலும் 50 ஆல் அதிகரிக்கலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
குறித்த பகுதியில் தேடுதல் மற்றும் மீட்பு நடவடிக்கைகள் தொடர்ந்தும் நடைபெற்று வருகிறது.
ஒழுங்காக பராமரிக்கப்படாத குறித்த சுரங்கத்தில், இவ்வாறான நிலச்சரிவுகள் இடம்பெறுவது சாதாரணமாகக் காணப்படுவதோடு, தொழிலாளர்கள் இவ்வாறான ஆபத்தான நிலையிலேயே பெறுமதியான மரகத கற்களை அகழ்வதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
மியன்மார் ஆட்சியாளரான ஆங் சாங் சூகி, தான் ஆட்சிக்கு வந்தபோது, கடந்த 2016இல் இத்தொழிற்துறையிலுள்ள பிரச்சினைகளை முற்றாக களைவதாக தெரிவித்திருந்தார்.
ஆயினும் அதில் ஒரு சிறிய மாற்றமே நிகழ்ந்துள்ளதாக, செயற்பாட்டாளர்கள் தெரிவிக்கின்றனர்.
அந்நாட்டு அரசாங்கம் வெளியிட்டுள்ள தரவுகளிலிருந்து, மியன்மாரின் மரகத விற்பனையானது, கடந்த 2016 - 2017 இல் 750.4 மில்லியன் டொலர் என கணக்கிடப்பட்டுள்ளது.
ஆயினும், பிரதானமாக சீனாவுக்கு ஏற்றுமதி செய்யப்படும் இத்தொழிற்துறையின் மதிப்பு இதனை விடவும் அதிகமாகும் என, வல்லுனர்கள் தெரிவிக்கின்றனர்.
Add new comment