உச்ச நீதிமன்றத்தில் வழக்கு
சீனாவுடனான நாட்டின் வர்த்தகக் கொள்கைகளை வெளியிடுமாறு மத்திய அரசுக்கு உத்தரவிடக்கோரி உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
லடாக் எல்லையில் இந்தியா-சீன படைகள் இடையே ஏற்பட்ட மோதலில் 20 இந்திய வீரர்கள் உயிரிழந்தனர். இந்த மோதலைத் தொடர்ந்து எல்லையில் போர் பதற்றம் உருவானது. பதற்றத்தை தணிக்க இரு நாடுகளின் ராணுவ உயர் அதிகாரிகள் தொடர்ந்து பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர்.
அதேசமயம், இந்தியாவில் சீன அரசுக்கு எதிராக ஆங்காங்கே போராட்டம் நடைபெற்றது. மேலும், சீனப் பொருட்களை புறக்கணிக்க வேண்டும், சீன பொருட்களுக்கு தடை விதிக்க வேண்டும் என்ற கோரிக்கையும் தீவிரமடைந்துள்ளது. டிக்டாக், ஹலோ உள்ளிட்ட 59 சீன செயலிகளுக்கு மத்திய அரசு தடை விதித்துள்ளது.
இந்நிலையில், சீனாவுடனான வர்த்தக கொள்கை தொடர்பாக உச்ச நீதிமன்றத்தில் ஒரு மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
அதில் சீனாவுடனான நாட்டின் வர்த்தகக் கொள்கைகளை வெளியிடுமாறு மத்திய அரசுக்கு உத்தரவிட வேண்டும் என வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது. மேலும், அதானி குழுமம், மகாராஷ்டிரா மற்றும் ஒரு சீன நிறுவனத்திற்கு இடையிலான புரிந்துணர்வு ஒப்பந்தத்தை இரத்து செய்வதற்கு உத்தரவிட வேண்டும் என்றும் மனுவில் கூறப்பட்டுள்ளது.
Add new comment