வெளவால்கள் மீது குற்றம் கூறுவது தவறு

வௌவால்கள் குறித்து நினைத்தாலே ஐரொரோ டான்ஷி ஆர்வமடைந்து விடுகிறார். அவற்றுக்கு ஈடு இணையில்லை என்கிறார் அவர்.

அமெரிக்காவின் டெக்ஸாஸ் தொழில்நுட்ப பல்கலைக்கழகத்தில் ஆராய்ச்சி மாணவராக இருக்கும் நைஜீரியாவைச் சேர்ந்த டான்ஷி, வெளவால்கள் குறித்த எதிர்மறையான எண்ணங்களை மாற்ற பணியாற்றி வரும் வெகு சில ஆராய்ச்சியாளர்களில் ஒருவர்.

உலகெங்கும் பெரும் அச்சுறுத்தலாக இருந்து வரும் கொரோனா வைரஸ் தொற்று வௌவால்களால்தான் பரவியது என்னும் கருத்து நிலவுகிறது.

வெளவால்களை கூண்டோடு அழிக்கும் பணி அவுஸ்திரேலியாவிலிருந்து இந்தோனேசியா வரைக்கும் நடைபெற்று வருகிறது. சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் இதுகுறித்து பெரும் அச்சம் தெரிவித்து வருகின்றனர்.

ஆனால் வெளவால்கள் மீது பழி சுமத்துவது உண்மையான குற்றவாளியை பிடியிலிருந்து நழுவ விட்டுவிடும் என பலர் கருதுகின்றனர். கொவிட் 19க்கு காரணமான சார்ஸ்-கோவ்2 வைரஸ், இதற்கு முன்பு குதிரை லாட வடிவிலான மூக்கு கொண்ட காட்டு வௌவால்களிடமிருந்து கண்டுபிடிக்கப்பட்ட வைரஸை போன்று 96% இருப்பதால் அனைத்து வெளவால்கள் மீதும் சந்தேகம் திரும்பியது.

"சமீபத்திய பரிணாம வளர்ச்சி குறித்த ஆராய்ச்சி ஒன்றில், 40_ -70 முந்தைய ஆண்டுகளில், சார்ஸ்-கோவ்2 வைரஸ், குதிரைலாட வெளவால்களிடமிருந்து பிரிந்து சென்றுவிட்டது என்பது தெரியவந்துள்ளது" என்கிறார் டான்ஷி."இது சார்ஸ்-கோவ்2 வைரஸ் வௌவால்களிடமிருந்து மனிதர்களுக்கு நேரடியாக பரவாது என்பதற்கு மேலும் ஆதாரமாக அமைகிறது" என்கிறார் அவர்.

கென்யாவின் மாசாய் மாரா பல்கலைக்கழகத்தில் வன உயிர் உயிரியல் மூத்த பேராசிரியர் போல் டபிள்யூ வெபாலா "பரிணாம வளர்ச்சி கோட்பாடுகளின்படி, மனிதர்களுக்கும் வெளவால்களுக்கும் இடையே நீண்ட இடைவெளிகள் உள்ளன. எனவே இந்த வைரஸ், வெளவால்களிலிருந்து பரவியுள்ளது என்று கூறப்பட்டாலும், மனிதர்களுக்கும் வெளவால்களுக்கும் இடையே யாரோ இதை கடத்தி இருக்க வேண்டும்" என்கிறார்.

எனவே வெளவால்கள் மூலம் இந்த சார்ஸ்-கோவ்2 வைரஸ் பரவியுள்ளது என்று வைத்துக் கொண்டாலும், அது மனிதர்களுக்கு நேரடியாக பரப்பி இருந்திருக்காது. எறும்புதின்னி இடையில் கடத்தியாக செயல்பட்டிருக்கலாம் என சந்தேகங்கள் எழுகின்றன. டான்ஷியும், அவருடன் பணிபுரியும் சக விஞ்ஞானிகளும் மனிதர்களுக்கு இடையே கொரோனா வைரஸ் பரவியதற்கு மனிதர்கள் மீது மட்டுமே குற்றம் சுமத்த வேண்டும் என்றும், வெளவால்கள் மீது இல்லை என்றும் கூறுகின்றனர்.

இந்த வைரஸ் பரவலுக்கு மனித செயல்பாடுகளே காரணம் என்கிறார் ஆராய்ச்சியாளர் வெபாலா.


Add new comment

Or log in with...